பா.ம.க.வினர் கொலை மிரட்டல்: டி.ஜி.பி.யிடம் இளவரசன் தந்தை புகார்
சென்னை: பா.ம.க.வினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசன், செல்லாங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டார்.
இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 3 கிராமங்கள் தீக்கிறையாயின. இந்த நிலையில் இளவரசன் கடந்த ஜூலை மாதம் 4ஆம் தேதி மர்மமான முறையில் தண்டவாளம் அருகில் இறந்து கிடந்தார்.
இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று தெரியாத நிலையில் பெற்றோர்களும் உறவினர்களும் குழப்பமடைந்துள்ள நிலையில் பா.ம.க.வினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக இளவரசனின் தந்தை இளங்கோ, டி.ஜி.பி.யிடம் இன்று புகார் மனு அளித்துள்ளார்.
சந்துரு என்ற பெயரில் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், இளவரசன் என்ன தியாகியா என குறிப்பிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டல் காரணமாக தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இளங்கோ வலியுறுத்தியுள்ளார்.