மோடியைச் சந்தித்த கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகினர்
ஹைதராபாத்: ஹைதராபாத் வந்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்கு தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரபலங்களைச் சந்தித்துப் பேசினார்.
பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை இன்று ஹைதராபாத்தில் தொடங்கி வைப்பதற்காக வந்த மோடியை தெலுங்குத் திரையுலகினர் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினர்.
இன்று ஹைதராபாத் வந்த மோடியைச் சந்திக்க 81 பேருக்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 25 பேர் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பூரி ஜெகன்னாத் ராவ் - ராம் கோபால் வர்மா
பார்க் ஹயாட்ஹோட்டலில் தங்கியிருந்த மோடியை, இயக்குநர்கள் விநாயக், பூரி ஜெகன்னாத், ராம் கோபால் வர்மா, நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
சந்திரபாபு நாயுடு மச்சான் பாலகிருஷ்ணா சந்திப்பு
முன்னதாக மோடியை, மறைந்த என்.டி.ஆரின் மகனும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மச்சானுமான என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா மோடியைச் சந்தித்துப் பேசினார். அதேபோல நடிகர் சந்திரமோகனும் சந்தித்தார். மேலும் நடிகர் மோகன்பாபு தனது மகள் நடிகை மஞ்சு லட்சுமி பிரசன்னாவுடன் மோடியைப் பார்த்தார். மோகன்பாபு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி மச்சானும் பார்த்தார்
அதேபோல மத்திய அமைச்சரும் நடிகருமான சிரஞ்சீவியின் மைத்துனரான அல்லு அரவிந்த்தும் மோடியைப் பார்த்தார்.
அதிகாரிகளும்
இதேபோல ஏராளமான முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளும் மோடியைச் சந்தித்துப் பேசினர். உள்ளூர் பாஜக தலைவர்களும் சந்தித்துப் பேசினார்கள்.
4 மணிக்கு பொதுக்கூட்டம்
இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெரும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசுகிறார். இரவு எட்டரை மணியளவில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அகமதாபாத் புறப்பட்டுச் செல்கிறார்.
உற்சாக வரவேற்பு - பலத்த பாதுகாப்பு
முன்னதாக ஹைதராபாத் வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் பாஜகவினர். மோடி வருகையைத் தொடர்ந்து ஹைதராபாத் முழுவதும் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மோடி போஸ்டர்களாகவே உள்ளன.
5000 போலீஸார்
பாதுகாப்புக்காக 5000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தலைவர்கள் வரவேற்பு
சிறப்பு விமானம் மூலம் பேகம்பேட் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த மோடியை, மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, மூத்த தலைவர்கள் பங்காரு தத்தாத்ரேயா, வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
படேல் சிலை திறப்பு
பிரசாரக் கூட்டத்திற்கு முன்னதாக கேசவ் நினைவுப் பள்ளியில் நடைபெறும் வல்லபாய் படேல் சிலை திறப்பு நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்கிறார்.
5 ரூபாய் கட்டணம்
மோடி கூட்டம் நடைபெறும் லால் பகதூர் ஸ்டேடியத்தில் 75,000 பேர் அமரலாம். ஆனால் 90,000 பேர் வரை ஆன்லைன் மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ள புக் செய்துள்ளனர்.கூட்டத்திற்கு வருவோரிடம் நுழைவுக் கட்டணமாக ரூ. 5 வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.