திருச்செந்தூர் அருகே தாது மணல் குவாரிகளில் ஆய்வு!! அதிகாரிகள் வாகனம் மோதி 2 பேர் படுகாயம்!
திருச்செந்தூர்: ஆறுமுகநேரி அருகே கடல் தாது மணல்குவாரிகளில் தமிழக அரசு அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர். இந்த அதிகாரிகள் சென்ற கார் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் விவி மினரல், பிஎம்சி உள்ளிட்ட கடல் தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் வருவாய்த்துறை, சுரங்கத்துறை, சுற்றுச்சூழல்துறை, நிலஅளவைத்துறை மற்றும் வனத்துறையினர் அடங்கிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்ட கோ-ஆப்டெக்ஸ் பொதுமேலாளர் சாந்தகுமார் வேம்பார் பகுதியிலும், கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மோகனசந்திரன் வைப்பார் பகுதியிலும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ரத்தினசாமி மணப்பாடு பகுதியிலும், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் லாரன்ஸ் மாதவன்குறிச்சி பகுதியிலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சக்திவேல் பெரியதாழை பகுதியிலும், விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வநாதன் படுக்கப்பத்து பகுதியிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் மாவட்டத்தில் தாதுமணல் எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டுள்ள 6 இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட ஆய்வுப்பணிகளை சிறப்பு ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி நேரில் பார்வையிட்டார்.
முன்னதாக ஆய்வுக்குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கலைஞானபுரம் பகுதியில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் லாரன்ஸ் தலைமையில் குழுவினர் உடன்குடியை அடுத்துள்ள மாதவன்குறிச்சி பகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். இந்த காரை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மணிராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த கார் தூத்துக்குடி-திருச்செந்தூர் பிரதான சாலையில்ஆறுமுகநேரி அருகேயுள்ள அடைக்காலபுரம் பகுதியில் சென்றபோது எதிர்பாரதவிதமாக முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த மாடசாமி, சுயம்புதுரை இருவரும் படுகாயம் அடைந்தனர்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications