உசுரோட இருக்கிறப்ப பாத்துறலாம்ல! … செவ்வாய்க்கு போக 1,00000 பேர் விண்ணப்பம்!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்குப் பயணிப்பதற்காக 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனராம். மேலும் பலர் தொடர்ந்து விண்ணப்பத்தைக் கொடுத்தவண்ணமும் உள்ளனராம்.
திரும்பி வர முடியாது என்று தெரிந்துள்ள நிலையிலும் கூட உயிருடன் இருக்கும்போதே செவ்வாய் கிரகத்தைப் பார்த்து விடும் ஆசையில் தாங்கள் இருப்பதாகவும் விண்ணப்பித்துள்ளவர்கள் கூறியுள்ளனராம்.
இந்த ஆண்டு விண்ணப்பதாரர்களிலிருந்து 40 பேரைத் தேர்வு செய்து இப்போதே பயிற்சிகளைத் தொடங்கப் போகிறார்களாம். அவர்களில் 4 பேர் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் பயணத்தைத் தொடங்குவார்களாம்.
2022ம் ஆண்டுக்குள்
2022ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் திட்டத்தில் மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.
குவியும் விண்ணப்பங்கள்
இந்த அமைப்பு செவ்வாய் கிரகத்தில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுத்திருந்தது. உடனே பலரும் விண்ணப்பங்களை அனுப்பத் தொடங்கி விட்டனராம்.
சி.இ.ஓ தகவல்
மார்ஸ் ஒன் அமைப்பின் சிஇஓ பாஸ் லேன்ட்ஸ்டிராப் இதுகுறித்துக் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களால் வசிக்க முடியுமா என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அங்கு மனிதர்களை அனுப்ப முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்தநோக்கில்தான் மார்ஸ் ஒன் திட்டத்தை ஆரம்பித்தோம்.
மக்களிடையே நல்ல ஆர்வம்
இந்தத் திட்டத்துக்கு மக்களிடையே நல்ல ஆர்வம் உள்ளது.பலரும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பயோடேட்டாக்களை அனுப்பி வைத்து வருகின்றனர் என்றார் அவர்.
கட்டணம் என்ன?
ஆனால் இந்த செவ்வாய் கிரகப் பயணத்திற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை பாஸ் தெரிவிக்கவில்லை. மேலும் விண்ணப்பதாரர்களின் விவரங்களையும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டோர்
18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம். இது ஒரு வழிப் பயணம். அதாவது செவ்வாய் கிரகத்தில் இறக்கி விடுவதோடு சரி. விண்ணப்ப கட்டணம் அமெரிக்க குடிமக்களுக்கு 38 டாலராகும்.
நேரடி ஒளிபரப்பும் உண்டு
செவ்வாய் கிரகத்திற்கு ஆட்களைக் கூட்டிச் செல்வதையும், அங்கு இறக்கி விடுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் திட்டத்தையும் பாஸ் குழுவினர் வைத்துள்ளனராம். 2022க்குள் அதற்கான தொழில்நுட்பம் வளர்ந்து விடும் என்பது இவர்களின் நம்பிக்கையாகும்.
இந்த ஆண்டு 40 பேர் தேர்வு
இந்த ஆண்டு விண்ணப்பதாரர்களிலிருந்து 40 பேரைத் தேர்வு செய்து இப்போதே பயிற்சிகளைத் தொடங்கப் போகிறார்களாம். அவர்களில் 4 பேர் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செவ்வாய் பயணத்தைத் தொடங்குவார்களாம். 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு போய்ச் சேருவார்களாம்.
அடுத்த 2 ஆண்டில் மேலும் 4 பேர்
அடுத்த 2 ஆண்டில் மேலும் 4 பேர் செவ்வாய் பயணத்திற்கு அனுப்பப்படுவர். இவர்கள் யாருமே மீண்டும் பூமிக்குத் திரும்பி வர மாட்டார்கள் என்பதுதான் இதில் விசேஷமானது.
கட்டிப் பிடித்து கண்ணீர் மல்க குட்பை
எனவே செவ்வாய் பயணத்திற்குக் கிளம்புவோரின் குடும்பத்தினர் அவர்களைக் கட்டிப்பிடித்து, கண்ணீர் விட்டுக் கதறி அழுது,முடிந்தால் அவர்களுக்கு இறுதிச் சடங்குகளையும் கூட அவர்கள் முன்னிலையிலேயே செய்து அனுப்ப வேண்டியதுதான்.