அடங்காத ஈரான்.. டிரம்ப் - நெதன்யாகுவை கொல்ல ரூ.558 கோடியில் பெரிய பிளான்.. வெகுமதி அறிவிப்பு
டெஹ்ரான்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை கொல்பவர்களுக்கு ரூ.558.87 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ஈரான் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது தற்போது உள்ள பதற்றத்தை இன்னும் அதிகரிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரானுக்கு பிரச்சனை உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இருநாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த ஆண்டை தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

இது போராக மாறியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள், நட்பு நாடுகளை நோக்கி தாக்கி பதிலடி கொடுத்தது. கடுமையாக நடந்த மோதல் கடந்த மாதம் 7 ம் தேதி முடிவுக்கு வந்தது. இருப்பினும் தொடர்ந்து 3 நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து நடத்திய முதல் நாள் தாக்குதலிலேய ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். மேலும் போர்க்கப்பல்கள் உள்பட ஏராளமான சேதத்தை ஈரான் சந்தித்துள்ளது. இதனால் எப்படியாவது அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற முனைப்பில் ஈரான் உள்ளது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் தலைக்கு விலை வைத்துள்ளது. அதன்படி டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரைக் கொல்பவர்களுக்கு 58 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.558.87 கோடி) பரிசுத் தொகையை அறிவிப்பதற்கான மசோதாவை ஈரான் தயார் செய்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இரு தலைவர்களை கொல்வோருக்கு வெகுமதி வழங்க இந்த மசோதா இடமளிக்கிறது. இந்த மசோதா ஈரான் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு ஈரான்
நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அஸிஸியால் வெளியிடப்பட்டுள்ளது.
"இஸ்லாமிய குடியரசின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் படைகளின் பதில் நடவடிக்கை" (Counter-Action by the Military and Security Forces of the Islamic Republic) என்ற பெயரில் உருவாக்கும் சட்டம் விரைவில் வரும்'' என்று அவர் கூறினார். இதுபற்றி ஈரான் தேசிய பாதுகாப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினர் மஹ்மூத் நபாவி கூறுகையில், ''டிரம்ப் மற்றும் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பும் ஒருவருக்கு வெகுமதி வழங்குவது குறித்த வாக்கெடுப்பு விரைவில் நாடாளுமன்றத்தில் நடைபெறும்'' என்றார்.
இந்த மசோதா பற்றிய தகவல் வெளியாவதற்கு முன்பாகவே, அரசு ஆதரவு ஊடகமான 'மசாஃப்' (Masaf), "டிரம்பை கொல்லுங்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தது. அதில் டிரம்பை கொன்றுவிட்டு ஈரான் அரசின் 50 மில்லியன் டாலர் நிதியை பெற்று கெள்ளலாம் என்று செய்தி வெளியிட்டு இருந்தது. தற்போது அது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் டிரம்ப் - நெதன்யாகு ஆகியோரை கொல்ல ஈரான் முழுவீச்சில் தயாராகி வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் டிரம்ப், நெதன்யாகுவை கொல்வது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. அதோடு ஈரானின் தற்போதைய பிளான் இருநாடுகளையும் இன்னும் கோபப்படுத்தி இருக்கும். இதனால் விரைவில் மீண்டும் ஈரான் - இஸ்ரேல், ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வெடிக்கலாம் என்று அஞ்சுகின்றனர்.














Click it and Unblock the Notifications