ஏசி, விளக்குகள் திடீரென ஆஃப்! அரை மணி நேரம் இண்டிகோ விமானத்திற்குள் பரிதவித்த பயணிகள்! என்ன நடந்தது?
டெல்லி: இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறால், விமானத்திற்குள் பவர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விளக்குகள் மற்றும் ஏசிக்கள் ஆஃப் ஆனதால் அரை மணி நேரம் விமானத்திற்குள் வியர்த்து புழுங்கி பயணிகள் பரிதவித்துள்ளனர். டெல்லி புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரவு நேரத்தில் பயணிகளை இந்த நிகழ்வு திகில் அடைய வைத்துள்ளது. விமான பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E 657 என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வதோதராவில் இருந்து டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. நேற்று முன் தினம் இரவு 8.40 மணியளவில் விமானம் கிளம்ப தயாராக இருந்தது.

லைட்கள், ஏசி ஆஃப் ஆனது
விமானத்தில் 160 பயணிகள் இருந்தனர். விமானம் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்ததால் விமானத்திற்கான பவர் சப்ளை விமான நிலையத்தின் கிரவுண்ட் பவர் யூனிட்டில் இருந்து சப்ளை ஆகிக் கொண்டு இருந்தது. விமானம் புறப்படுவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருந்த நேரத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்திற்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.
அடுத்த நொடியே விமானத்தில் உள்ள லைட்கள் மற்றும் ஏசி ஆஃப் ஆனது. இரவு நேரம் என்பதால் விமானம் இருளில் மூழ்கியது. அடுத்த சில நொடிகளில் புழுக்கம் அதிகமகாக இருந்ததால் பயணிகளுக்கு வியர்த்து கொட்டியது. இதனால் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தொழில்நுட்ப குழுவினர் 15 முதல் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு தொழில் நுட்ப கோளாறை சரி செய்தனர். விமானத்திற்குள் இயல்பு நிலை திரும்ப மேலும் 15 நிமிடங்கள் பிடித்தது.
வியர்வையில் குளித்த பயணிகள்
மொத்தமாக 30 நிமிடங்கள் பயணிகள் திண்டாடி போயினர். ஏசியும் இயங்காததால் பயணிகள் வியர்வையில் குளிக்கும் அளவுக்கு வியர்த்து கொட்டியது. சுமார் அரை மணி நேரம் கழித்து இயல்பு நிலை திரும்பியதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானத்தில் ஏற்பட்ட இந்த திடீர் டெக்னிக்கல் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது. பிளைட் ரேடார் 24 தரவுகளின்படி 8.4 மணிக்கு புறப்பட இருந்த விமானம் 1.20 நிமிடங்கள் தாமதமாக 10 மணியளவில் புறப்பட்டு சென்றது.
இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம்
இந்த சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- இண்டிகோ விமானம் 6E 657 விமானம் கடந்த 17 ஆம் தேதி தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதம் ஆனது. உடனடியாக இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது. பயணிகளின் அசவுகரியத்தை குறைக்க முடிந்த அளவு சிறந்த முயற்சிகளை எங்கள் தொழில் நுட்பக்குழு மேற்கொண்டது. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கே நாங்கள் அதிக முன்னுரிமை தருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.














Click it and Unblock the Notifications