மோசடி புகாரில் கைதான சசிகலா அக்காள் மகன் பாஸ்கரன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்துவிட்டதாக "தலைவன்" படக் கதாநாயகன் பாஸ்கரன் மீது தியாகராய நகரை சேர்ந்த பிரகாஷ் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரனை கடந்த ஜூலை 7ஆம் தேதி கைது செய்தனர். மற்றொரு வழக்கிலும் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஸ்கரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால் தற்போது பாஸ்கரனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனாலும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதி அளித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கில் சித்திரைச்செல்வன் மீதுதான் பிரதானமான மோசடி குற்றச்சாட்டு உள்ளது. எனவே பாஸ்கரனுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்படுகிறது. அவர் சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, ரூ.1 லட்சத்துக்கான ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் உத்தரவாதமும் அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட போலீசில் 2 வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின்னர் தேவைப்படும் நாட்களில் போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications