தென்னகம் முழுவதும் மோடி ஆதரவுக் கூட்டங்கள்... பாஜக பரபரப்புத் திட்டம்
டெல்லி: நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டும் வகையிலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலி்ல 272 இடங்களை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற வேகத்திலும், தென் மாநிலங்கள் பக்கம் தீவிரக் கவனத்தைத் திருப்புகிறது பாஜக.
தென் மாநிலங்களில் அதிக அளவில் மோடி மற்றும் பாஜக ஆதரவு பொதுக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாம்.
இதன் மூலம் தென் மாநிலங்களிலும் கணிசமான தொகுதிகளைப் பிடிக்க அக்கட்சி திட்டம் வகுத்துள்ளதாம்.
டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட உயர் மட்டக் கூட்டம் நேற்று நடந்தது. அதில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.

பூத் அளவிலிருந்தே
இதில் பூத் அளவிலிருந்து கட்சியை பலப்படுத்துமாறு அனைத்து மாநிலத் தலைவர்களுக்கும், குறிப்பாக தென் மாநிலத் தலைவர்களுக்கு பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

எல்லா வயதினரையும் கவருங்கள்
அதேபோல யார் யாரெல்லாம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பார்கள் என்பதைக் கண்டறிந்து வயது பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேரையும் கட்சி பக்கம் இழுக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

மோடியின் திட்டம்
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், எப்படி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளலாம், தேர்தலை எப்படி சந்திக்கலாம் என்பது குறித்து மோடி விரிவாகப் பேசினார்.

வாக்காளர்களை இழுக்க வேண்டும்
வாக்காளர்களை பாஜகவுக்கு ஆதரவாக திருப்ப வேண்டும். காங்கிரஸுக்கு எதிரான அலை நாடு முழுவதும் உள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். சவாலாக இதை எடுத்துக் கொண்டு பாஜகவினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அடிமட்ட அளவில் வலுப்பெற வேண்டும்
பாஜகவை அடிமட்ட அளவிலிருந்து பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

இளைஞர்களைக் குறி வையுங்கள்
இளைஞர்களை அதிக அளவில் கவரும் வகையில் நமது திட்டம் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் ஓய்வே இல்லாமல் அத்தனை பேரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

20 கமிட்டிகள் அமைப்பு
பிரசாரத்தில் தீவிரமாக செயல்படுவதற்கு வசதியாக 20 துணைக் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களை விரிவாக திட்டமிட்டு தீவிரமாக செயல்படுமாறு மோடி கேட்டுக் கொண்டுள்ஏளார் என்றார்.

தென் மாநிலங்களுக்கு முக்கியத்துவம்
நேற்றைய கூட்டத்தில் தென் மாநிலங்களிலும் தீவிர கவனம் செலுத்த முடிவானதாம். மேலும் தென் மாநிலங்களில் மோடி ஆதரவு பொதுக் கூட்டங்களை அதிக அளவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications