கிரீம் வாங்க மாட்டேங்குறாங்களே... மக்கள் திருந்திட்டாங்களா, இல்லை முழிச்சுக்கிட்டாங்களா?
மும்பை: சிவப்பழகைத் தரும் கிரீம்களின் விற்பனை குறைந்துவிட்டதாம்.
டிவி சேனல்களில் பல்வேறு சிவப்பழகு கிரீம்கள் விளம்பரம் வரும். அதில் கருப்பாக உள்ள ஒரு பெண் சிவப்பழகு கிரீமை 2 முதல் 4 வாரங்கள் பயன்படுத்திவிட்டு கண் கூசும்படி சிவப்பாக மாறிவிடுவார்.
இதை பார்க்கும் நம் வீட்டு பெண்கள், ஏன் ஆண்களும் கூட தங்கள் நிறத்தை சிவப்பாக ஆக்க அந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
சிவப்பழகு கிரீம்களின் விற்பனை குறைவு
ஜோராக ஓடிக் கொண்டிருந்த சிவப்பழகு கிரீம் விற்பனை டல்லடித்துவிட்டதாம்.
இருக்கும் நிறம் போதும்
கருப்பாகவோ, மாநிறமாகவோ இருப்பவர்கள் சிவப்பழகு கிரீம்களை வாங்கி பயன்படுத்தி பளிச்சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தற்போது உள்ள பெண்களில் பலர் இருக்கும் நிறம் போதும் கிரீம்கள் வேண்டாம் என்று நினைக்கின்றனர்.
வளர்ச்சி குறைவு
ரூ.2,940 கோடி மதிப்புள்ள சிவப்பழகு கிரீம் மற்றும் லோஷன் சந்தை கடந்த ஜூன் மாதம் வரை - 4.5 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. ஃபேர் அன்ட் லவ்லிவியின் விற்பனை 4.2 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் ஆண்களுக்கான இமாமியின் ஃபேர் அன்ட ஹேன்ட்சம்மின் விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளது.
ஃபேஸ்வாஷ்
சிவப்பழகு கிரீம்களின் விற்பனை குறைந்தாலும் ஃபேஸ்வாஷ், பாடிவாஷ், டியோரண்டுகளின் விற்பனை ஜோராக நடக்கிறது.
நிறுத்திவிட்டேன்
சிவப்பழகு கிரீம்களை பல ஆண்டுகள் பயன்படுத்தி அதனால் முகத்தில் வடு ஏற்பட்டதால் அதன் பயன்பாட்டை நிறுத்திவிட்டதாக ஐடி நிறுவன ஊழியை அங்கிதா ஸ்ரீவஸ்தவா(25) தெரிவித்தார்.
முட்டாள்தனம்
சிவப்பழகு கிரீம்களை பயன்படுத்தவதால் ஒருவரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்பது முட்டாள்தனம். தன்னம்பிக்கை கல்வியால் வரும் என்று டெல்லியில் உள்ள சமூக ஆய்வுக்கான மையத்தின் தலைவி ரஞ்சனா குமாரி தெரிவித்துள்ளார்.
கருப்பே அழகு
பெண்கள் கருப்பாக இருப்பதால் பல ஆண்கள் மணக்க மறுக்கின்றனர். இதனால் கருப்பே அழகு என்ற பிரச்சாரத்தை சென்னையைச் சேர்ந்த உமன் ஆஃப் வொர்த் நிறுவனம் கடந்த 2009ம் ஆண்டு துவங்கியது.