அருணாசலப்பிரதேசத்தில் சீனா மீண்டும் ஊடுருவல்! 4 நாள் முகாம் போட்டு தங்கியதாம்!!
டெல்லி: அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் ஊடுருவிய சீனா சில நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 4 மாதங்களுக்கு முன்பு சீனா ஊடுருவி பல நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனது. பின்னர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 30 கிலோ மீட்டர் வரை ஊடுருவியது சீனா.
அருணாசலப் பிரதேசத்தின் சக்லஹம் மாவட்டத்துக்குள் ஊடுருவிய சீன படையினர் அதை தங்களது பகுதி என உரிமை கோரி பேனர் வைத்திருந்தனர். அப்போது இந்திய படையினர் ரோந்து சென்றனர். இருப்பினும் சீன ராணுவத்தினர் முகாம் அமைக்காததால் உடனே தங்களது எல்லைக்குத் திரும்பிவிடுவர் என்று கூறப்பட்டது.
இருப்பினும் ஆகஸ்ட் 13-ந் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய அந்த சீன ராணுவக் குழுவினர் தொடர்ந்து 3 முதல் 4 நாட்கள்வரை முகாம் போட்டு தங்கிவிட்டுத் திரும்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.