'முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி... ரூ.8. கோடி நிதி: ஜெயலலிதா
சென்னை: தேசிய விளையாட்டு போட்டிகளை போன்று தமிழகத்தில் "முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள்" ஆண்டுதோறும் நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
"முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், பத்து விளையாட்டுகளில் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிடையே இந்தப் போட்டிகளின் தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த போட்டிகளை மேலும் வலுப்படுத்தி, போட்டிகளின் தரம் அதிகரிக்கும் வகையில் தேசிய விளையாட்டு போட்டிகளை போன்று தமிழகத்தில் "முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள்" ஆண்டுதோறும் நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இப்போட்டிகளுக்கென 8 கோடியே 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் கோப்பைக்கான போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக, தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளான கூடைப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, கபாடி, நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் மற்றும் இறகு பந்து ஆகியவைகள் மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்படும்.
ஒரு மாவட்டத்திற்கு 204 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என ஒரு மண்டலத்திற்கு 1,632 பேர்கள் இவ்விளையாட்டில் பங்கேற்பார்கள். மொத்தத்தில் 204 பேர் தங்கப் பதக்கமும், 204 பேர் வெள்ளிப் பதக்கமும், 204 பேர் வெண்கலப் பதக்கமும் வென்று அதற்குரிய பரிசுத் தொகையை பெறுவார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு விஞ்ஞான ரீதியில் பயிற்சி அளிப்பதற்கு ஏதுவாக நவீன தொழில் நுட்ப வசதிகளை உள்ளடக்கிய விளையாட்டு அறிவியல் மையத்தினை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகை புதிய கட்டடம் கட்டுவதற்கும், புதிய உபகரணங்கள் வாங்குவதற்கும், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை நியமிப்பதற்கும் செலவிடப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications