ஜெகன் மோகன் ரெட்டிக்கு ராக்கி கட்ட முடியாமல் சிறைக்கு வெளியே நிறுத்தப்பட்ட தங்கைகள்
ஹைதராபாத்: ரக்ஷா பந்தனையொட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ராக்கி கட்ட சிறைக்கு சென்ற பெண்களுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது. பெண்கள் தங்கள் சகோதரர்கள் அல்லது சகோதரர்களாக பாவிக்கும் ஆண்களின் கையில் ராக்கியை கட்டுவது தான் ரக்ஷா பந்தன்.

ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ராக்கி கட்ட அவரது பெண் ஆதரவாளர்கள் சிறைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் ஜெகனை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். தங்களில் ஒருவரையாவது ஜெகனை சந்திக்க அனுமதி அளிக்குமாறு அவர்கள் கேட்டனர். அதற்கும் அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறைக்கு வெளியே ஜெகனின் புகைப்படத்தை ஏந்தி கோஷமிட்டனர்.
இதற்கிடையே பிற கைதிகளுக்கு ராக்கி கட்ட வந்த கல்லூரி மாணவிகள் மற்றும் 5 பள்ளி மாணவிகள் மட்டும் சிறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது தவிர ஜெகனின் சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா சிறைக்கு சென்று ஜெகனுக்கு ராக்கி கட்டினார். அதன் பிறகு ஜெகனை அவரது மனைவி பாரதியும், 2 மகள்களும் சந்தித்து பேசினர்.












Click it and Unblock the Notifications