நெல்லை மாவட்ட வனப்பகுதிகளில் மான் வேட்டை- துப்பாக்கியுடன் 4 பேர் கைது
கடையநல்லூர்: நெல்லை மாவட்ட வனப்பகுதிகளில் மான்வேட்டையாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, மான்கறி ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர் அருகே உள்ள வனப்பகுதியில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை மர்மகும்பல் வேட்டையாடி வந்தது. இதற்கு ஆதாரமாக மான் வேட்டையாடப்படும் வீடியோ காட்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர்களின் செல்போன்களில் பரவியது.
வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடிக்க வனத்துறையினரும், போலீசாரும் தீவிர நடவடிக்கை கொண்டு வந்தனர். இருந்தபோதிலும் வேட்டை கும்பல் சிக்கவில்லை.
இந்நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திரபிதாரி உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதம் தலைமையிலான போலீசார் கடையநல்லூர் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் நவீனரக நாட்டு துப்பாக்கி, தலையில் மாட்டக்கூடிய டார்ச் லைட்டுகள், கோடரி மற்றும் மான் கறி ஆகியவை இருந்தன.
அவர்கள் கடையநல்லூர் காட்டுப் பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்ததில் கடையநல்லூர் அருகே உள்ள புன்னையாபுரத்தை சேர்ந்த பேச்சி (வயது 23), முத்துபாண்டி (21), வெங்கடேஷ் (19), தர்மாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (27) என்பது தெரியவந்தது.
அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிக்கு லைசென்ஸ் பெறவில்லை என்பதும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் எவ்வளவு நாட்களாக வேட்டையில் ஈடுபட்டார்கள்? அவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி மேற்கொண்டுள்ளனர்.