ஸ்பெக்ட்ரம் வழக்கு: தயாளு அம்மாள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் விலக்கு!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு சட்டவிரோதமாக பணம் கைமாறியது என்பது வழக்கு. இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் ஷரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.
கலைஞர் டிவி தொடர்பான வழக்கில் அதன் நிர்வாகிகள் ராஜேந்திரன், அமிர்தம் ஆகியோர் ஏற்கெனவே சாட்சியம் அளித்துவிட்டனர்.
கலைஞர் டிவியில் 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளையும் சிபிஐ சாட்சியாக சேர்த்திருந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் தமக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க முடியாது என்று கூறி சம்மனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றப் படிகளேறினார் தயாளு அம்மாள். ஒருவழியாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தயாளுவின் உடல்நிலையை சென்னைக்கு வந்து பரிசீலித்து அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையின்படி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தயாளு நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து இன்று உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது. மேலும் தயாளு அம்மாளின் உடல்நிலையை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை திருப்தி அளிப்பதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் உடல் நிலை காரணமாக டெல்லிக்கு வர முடியாத தயாளு அம்மாள், சென்னையில் அமைக்கப்படும் நீதிபதிகள் குழு முன்பு ஆஜராகி சாட்சியமளிக்க அனுமதி அளித்தனர்.












Click it and Unblock the Notifications