‘மயான வேட்டைக்குச் சென்ற இளைஞர் மர்மச்சாவு: பேயடித்ததா...? இன்று பிரேதப் பரிசோதனை
சாத்தான்குளம்: கோவில் கொடைவிழாவில் மயான வேட்டைக்குச் சென்ற இளைஞர் மர்மமான முறையில் மூக்கில் ரத்தம் வடிந்து இறந்தார். பேயடித்ததாகக் கூறி பொதுமக்கள் புதைத்த உடலை சந்தேகத்தின் பேரில் இன்று பிரேத பரிசோதனை செய்ய இருக்கிறார்கள்.
முன்பெல்லாம், பொதுவாக கிராமங்களில் தான் விஞ்ஞானத்தின் வீரியம் குறைந்து காணப்பட்டது. அதனால் மக்கள் மூடப்பழக்க வழக்கங்களுக்கு அடி பணிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால், இன்று உலகமே சிறு குடைக்குள் வந்தது போல், தூரங்கள் குறைந்து கிராமங்களும், நகரங்களுக்கு இணையாக முன்னேறி வருகின்றன.
ஆனாலும், அவ்வப்போது ஆங்காங்கே சில விநோதச் சம்பவங்கள் அரங்கேறுவது உண்டு. அது போலத்தான் சாத்தான்குளம் கோவில் திருவிழாவில் பேயடித்து மரணமடைந்ததாகக் கூறி பொதுமக்களால் புதைக்கப் பட்ட வாலிபரின் உடல்,இன்று மறு பிரேதப் பரிசோதனை செய்யப் பட இருக்கிறது.
சாமியாடி....
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெபஞானபுரம் தெருவைச் சேர்ந்த 60 வயது நடராஜன், அங்குள்ள ஞானக்கரை சுவாமி கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். ஆண்டுதோறும் அக்கோவிலில் நடைபெறும் கோவில் கொடையில் சாமியாடுவது நடராஜின் வழக்கம்.
கோவில் தகராறு...
ஆனால், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தகராறின் காரணமாக நடராஜன் தற்போது சாமியாடுவதில்லையாம். ஆனால், அவருக்குப் பதில் கடந்தாண்டு சாமியாட முற்பட்டார் அவரது 26வயது மகன் ஜெயகணேஷ். ஆனால், சிலர் செய்த பிரச்சினைகளால் அது தடுத்து நிறுத்தப் பட்டது.
கோவில் திருவிழா....
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோவில் கொடை விழா கடந்த 15-ந் தேதி நடந்தது. அதில் ஜெயகணேஷ் சாமியாடினார். திருவிழாவின் ஒரு பகுதியாக, மயான வேட்டை நடை பெற்றது. அப்போது, கோவில் பூசாரி, ஒரு தடியங்காயை சுடுகாட்டு பகுதியில் சென்று, அரிவாளால் இரண்டு துண்டாக வெட்டி, அதில் குங்குமத்தை தடவி எடுத்து வருமாறு ஜெயகணேசிடம் கூறினார்.
மயான வேட்டை....
அதன் படியே ஜெயகணேஷ் தடியங்காய், அரிவாள், குங்குமத்தை பெற்றுக்கொண்டு அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு இருட்டில் சென்றுள்ளார். நீண்ட நேரம் கழித்து திரும்பி வந்த ஜெயகணேஷ், சாமி பீடத்தின் அருகில் சுண்டு விழுந்துள்ளார்.
களைப்பு....மரணம்
சுடுகாட்டுக்கு சென்று வந்த களைப்பு மற்றும் அதிர்ச்சி என எண்ணிய பொதுமக்கள், நீண்ட நேரமாகியும் ஜெயகணேஷ் எழுந்திரிக்காததால், சந்தேகத்தில் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். ஜெயகணேஷை திருப்பிப் பார்த்த போது, அவரது மூக்கில் ரத்தம் வடிந்த் வண்ணம் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
பேயடித்து....
சுடுகாட்டில் பேயடைத்ததால் ஜெயகணேஷ் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகித்த மக்கள் உடனடியாக ஜெயகணேஷின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று புதைத்துள்ளனர். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை ஊரார்.
மர்ம மரணம்....
அண்ணன் ஜெயகணேஷின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த அவரது தங்கை முத்துப் பாரதி இது கொலையாக இருக்கலாம் என தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், 4 பேர் சேர்ந்து ஜெயகணேஷை அடித்துக் கொன்றதாகவும் தனது புகாரில் சந்தேகம் தெரிவித்துள்ளார் முத்துப்பாரதி.
அடித்துக் கொலை....
புகாரைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சுடுகாட்டு பகுதியில் இருட்டில் மறைந்து நின்று ஒரு கும்பல், ஜெயகணேசை பலமாக தாக்கியதாகவும், இதில் அவரது முகம், வயிறு, மர்ம உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் சிலர் சாட்சி கூறியதாகத் தெரிகிறது.
பிரேதப் பரிசோதனை....
அதனைத் தொடர்ந்து, தாசில்தார் முன்னிலையில் ஜெயகணேசின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டு டாக்டர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே ஜெயகணேஷ் மரணாத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப் படுகிறது.












Click it and Unblock the Notifications