நல்லா பிளான் பண்ணி சுத்துனா... இந்தியா ஒரு சொர்க்கம்: அமெரிக்க பெண் எழுத்தாளரின் இனிப்பான அனுபவங்கள்
வாஷிங்டன்: இந்தியாவுக்குத் தனியாகச் செல்வதற்குப் பெண்கள் சற்றும் பயப்படத் தேவையில்லை. ஸ்மார்ட்டாக தங்களது பயணத்தை திட்டமிட்டாலே போதும், எந்தப் பிரச்சினையும் வராது என்று கூறியுள்ளார் அமெரிக்கப் பெண் உடே ஜங்கர்.
சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவியான மிக்கலா கிராஸ், தனது இந்தியப் பயண அனுபவங்களை சிஎன்என் தொலைக்காட்சிக்கு எழுதியிருக்கிறார். அதில், பெண்களுக்கு இந்தியால் ஒரு பெரும் துயரமான இடமாக, பாலியல்ரீதியில் தொந்தரவுகள் நிறைந்த இடமாக இருப்பதாக எழுதியுள்ளார்.
இந் நிலையில் அவருக்குப் பதிலளிக்கும் வகையில், அமைந்துள்ளது உடே ஜங்கரின் அனுபவங்கள்.
இந்தியா என்றாலே பெண்கள் போகக் கூடாது நாடு போல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில் உடே ஜங்கரின் கருத்து இந்திய ஆண்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. அவர் கூறியிருப்பதைப் பாருங்கள்
தாராளமாக தனியாக போகலாம்:
இந்தியாவுக்கு தனியாக பெண்கள் பயணிக்கலாம். ஆனால் சற்று முன்னெச்சரிக்கை மற்றும் காமன்சென்ஸ் இருந்தால் போதும்.
டெல்லியில் முதல் இரவு:
நான் டெல்லி சென்றிருந்தபோது அங்கு எனது முதல் இரவை, நண்பர்களுடன் டின்னர் சாப்பிட்டு கழித்தேன். இரவு தாமதமாகவே நான் தங்கியிருந்த ஒய் டபிள்யூசிஏ விடுதிக்குத் திரும்பினேன். அங்கு எனக்காக 3 ஆண் பணியாளர்கள் காத்திருந்தனர். அவர்கள் என்னிடம், மேடம், எப்படி திரும்பி வந்தீர்கள் என்று ஆச்சரியமாக கேட்டனர்.
பரிவுடன் உதவிய ஆண்கள்:
எனது பயணத்தின்போது ஒவ்வொரு முறையும் நான் தனியாக போகும்போது பல ஆண்கள் எனக்கு பரிவுடன் பல உதவிகளைச் செய்தனர். என்னிடம் தவறாக நடக்கவே யாரும் முயற்சிக்கவில்லை. வித்தியாசமாக பார்க்கவில்லை. தவறான செயல்களில் ஈடுபட முயற்சிக்கவில்லை. பாதுகாப்பாக அவர்கள் எனக்கு இருந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரயிலில் என்னுடன் பயணித்த 3 ஆண்கள்:
நான் டெல்லியிலிருநது திருவனந்தபுரத்திற்கு ரயிலில் போனபோது முதல் வகுப்பு பெட்டியில் என்னுடன் 3 ஆண்களும் பயணித்தனர். நான்கு நாட்கள் அது நீடித்தது. அதில் முதல் 16 மணி நேரம் நான் நன்றாக தூங்கினேன். நான் விழித்து எழுந்தபோது அவர்கள் என்னிடம், சாப்பாடு கொண்டு வருபவர் என்னை எழுப்ப முயன்றதாகவும், தாங்கள்தான் நான் நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக தடுத்து விட்டதாகவும் கூறினர்.
பாதுகாவலர்கள் போல:
எனக்கு கிட்டத்தட்ட பாதுகாவலர்கள் போல அவர்கள் நடந்து கொண்டனர். அடுத்த சில நாட்கள் என்னை பல அன்னியப் பார்வையிலிருந்தும் காத்தனர்.
பத்து பேர் மத்தியில் கத்தி விடுங்கள்:
நான் பொது இடத்தில் போகும்போது மிகவும் உஷாராக இருப்பேன். யாராவது என்னிடம் சில்மிஷம் செய்வதாக உணர்ந்தால் மக்கள் கூட்டத்திற்கு நடுவே அவர்களை நிறுத்தி சத்தம் போட்டு விடுவேன். அது நல்ல பலனைக் கொடுக்கும். நமக்காக நாலு பேர் வந்து ஆதரவாக பேசுவார்கள். சேட்டை செய்பவர்களிடம் உனது தாய், சகோதரியிடம் யாராவது இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்று கேட்பேன். இந்தியாவில் இது நன்றாக வேலை செய்யும்.
வீட்டுக்காரர் இருப்பதாக பொய் சொல்லுங்கள்:
தனியாக போகும்போது யாராவது பின் தொடர்ந்தால், நின்று, நான் எனது கணவரைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லுங்கள். உங்களுக்குக் கணவரே இல்லாவிட்டாலும் அப்படி பொய் சொல்லுங்கள் போய் விடுவார்கள்.
எல்லோரும் பார்க்கத்தான் செய்வார்கள்:
இந்தியா போன்ற நாடுகளுக்குப் போகும் போது பிச்சைக்காரர் முதல் அத்தனை பேரும் அந்நிய நாட்டவரை வெறித்துப் பார்க்கத்தான் செய்வார்கள். சில தடங்கல்களை ஏற்படுத்துவார்கள். காரணம், ஆண்களை விட பெண்கள்தான் அதிக ஈர்ப்பு கொண்டவர்கள். இது எல்லா நாட்டுப் பெண்களுக்கும் பொருந்தும். ஆனால் நம்பி்க்கையுடன் செயல்பட்டால் இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம்.
காமன்சென்ஸ் தேவை:
தனியாக போகும்போது முக்கியமாக உங்களுக்குத் தேவையானது காமன்சென்ஸ்தான். எந்த இடத்திற்குப் போகிறோமோ அதற்கேற்ப டிரஸ் செய்ய வேண்டும். குட்டைப் பாவாடை போன்றவற்றை தவிர்க்கலாம். டாப்ஸ் இல்லாமல் போவதைத் தவிர்க்கலாம். உடலை மூடிய உடைகள் நல்லது.
கூட்டமாக இருந்தால் போகாதீர்கள்:
இந்தியா போன்ற நாடுகளில் எப்போதும் திருவிழாக்கள் என்று கூட்டமாகவே இருக்கும். இருப்பினும் அதுபோன்ற கூட்டமான நிகழ்ச்சிகளைத் தனியாக போகும் பெண்கள் தவிர்ப்பது நல்லது. அப்படிப்பட்ட இடத்தில் தவறு செய்பவர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி தப்பிப் போய் விடலாம்.
போன இடத்தில் துணை தேடலாம்
இந்தியாவில் தனியாக பயணம் செய்யும்போது அங்கு நமது நாட்டவர் யாராவது தென்பட்டால் நட்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் இணைந்து கொள்ளலாம். அது பாதுகாப்பானது மட்டுமல்ல, வசதியானதும் கூட.
டாக்சி பிடிப்பதாக இருந்தால்:
எந்த ஊருக்குப் போனாலும் நீங்களாகவே டாக்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு செல்லும் இடத்தைக் கூறாதீர்கள். முன்பே தெளிவாக பேசி விட்டு ஏற வேண்டும். அதேபோல தங்குமிடத்தை முன்கூட்டியே புக் செய்து விட்டுத்தான் எந்த ஊருக்கும் போக வேண்டும்.
சாலை பயணத்தைக் குறையுங்கள்:
முடிந்தவரை சாலை மார்க்கமாக செல்வதைக் குறைப்பதுநல்லது. மாறாக விமானப் பயணம் அல்லது ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம்.
டெல்லி, கேரளா, ராஜஸ்தான் பாதுகாப்பு
ஆனால் டெல்லி, கேரளா, ராஜஸ்தான் போன்ற ஊர்களில் சாலைப் பயணம் நல்லது. அங்கு பாதுகாப்பு அதிகம்.
நம்பிக்கையை விடாதீர்கள்
எல்லாவற்றையும் விட முக்கியமானு, ஊருக்குக் கிளம்பும்போது லக்கேஜுடன் சேர்த்து நம்பிக்கையையும் கூடவே எடுத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு செல்லும்போது பிரச்சினைகள எளிதில் சமாளிக்கலாம் என்று கூறியுள்ளார்.