ராஜ்யசபாவில் மைத்ரேயனுடன் மல்லுக்கட்டிய நாராயணசாமி
டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி சபை நடவடிக்கைகளை முடக்குவது வாடிக்கைதான்.. ஆனால் நேற்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, அதிமுகவின் மைத்ரேயனுடன் சரிக்கு சமமாக மல்லுக்கட்டிக் கொண்டு நின்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
ராஜ்யசபா நேற்று காலை கூடிய போது, பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் பேசினார். அவர் பேசுகையில், தற்போது பிரதமர் மன்மோகன் சிங் சபையில் இருக்கிறார்... நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பான பைல்கள் மாயமானது பற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
ஆனால் இதற்கு பதில் அளித்துப் பேசிய இணையமைச்சர் ராஜீவ் சுக்லா, ஏற்கனவே நிலக்கரித்துறை அமைச்சர் இந்த சபையில் விளக்கம் அளித்துள்ளார். தேவைப்பட்டால் பிரதமர் விளக்கம் அளிப்பார் என்றார்.
இதை ஏற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சியின் சீதாராம் யெச்சூரி, அதிமுகவின் மைத்ரேயன் ஆகியோர் பிரதமர் விளக்கம் அளிக்க வலியுறுத்தினர்.
அப்போது ஆவேசமாக எழுந்த இணையமைச்சர் நாராயணசாமி, மைத்ரேயனை நோக்கி அமரும்படி கூற மைத்ரேயனும் பதிலடி கொடுத்தார். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் தொடர்ந்த நிலையில் சபை நடவடிக்கைகளை ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications