7 வயது சிறுமியிடம் சில்மிஷம் - மதரசா ஆசிரியர் கைது
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே பாலியல் சேஷ்டைகளில் ஈடுபட்ட மதரசா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பொலியார் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் பெயர் அப்துல் கரீம். 7 வது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சைல்ட் ஹெல்ப்லைனுக்கு போன் செய்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. ரம்ஜான் முடிந்தநாளிலிருந்தே அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் அந்த மதரசா ஆசிரியர். இதனால் அச்சிறுமி மன ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
முதலில் இந்த விஷயத்தை அச்சிறுமியும், அவரது தோழிகளும், தாங்கள் படித்து வரும் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் தாயாரை அழைத்து நடந்த கொடுமையைக் கூறியுள்ளார் தலைமை ஆசிரியை.
அதன் பின்னர் சிறுமியின் தாயார் மதரசா கமிட்டியிடம் புகார் அளித்தார். இதையடுத்து மதரசா உறுப்பினர்களிடையே மோதல் வெடித்தது. காரணம், அங்கு இரு பிரிவாக உறுப்பினர்கள் இருந்ததால். சிறுமியின் தாயாருடைய உறவினர் ஒரு பிரிவில் உறுப்பினராக இருக்கிறார். ஆனால் சிறுமியின் தாயாருக்கு எதிரான பிரிவினர், புகாரைத் திரும்பப் பெறுமாறு சிறுமியின் தாயாரை வலியுறுத்தத் தொடங்கினர். மதரசா நிர்வாகமும் அதேபோல நெருக்கடி கொடுத்தது.
இதையடுத்து சிறுமியின் உறவினர் ஒருவர் சைல்ட் ஹெல்ப்லைனுக்குப் போன் செய்து தகவலைக் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் மதரசா ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பாலியல்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதைத் தொடர்ந்து போலியார் மதசரா கமிட்டியைச் சேர்ந்த பலரும் திரண்டு வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கரீமைக் கைது செய்ததில் சதி அடங்கியுள்ளது என்று கூறி போராட்டம் நடத்தினர். கரீமுக்கு எதிரானவர்கள் சதி செய்து அவர் மீது அபாண்டமான புகாரை கிளப்பியுள்ளதாக மதரசா கமிட்டி செயலாளர் முகம்மது யூசுப் தெரிவித்தார்.