மீனவர் பிரச்சினை தீர இந்திரா காந்தி போல நடவடிக்கை எடுங்கள்: கருணாநிதி

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசுடன் தமிழக அரசும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு மாநில அரசின் ஆதரவுடன் இலங்கை சென்று திரும்ப வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களுக்கு உரிய அனுமதியைத் தரவில்லை என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சுமூகப் பேச்சுவார்த்தைக்குத் தாமதம் செய்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், இதுவரை மத்திய அரசு மீதே பழி சுமத்தி காலம் கடத்தி வந்ததைப் போலச் செய்யாமல், தற்போதாவது தாமதத்தைத் தவிர்த்து, மீனவர் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்.
கடற்படைத்தளம்
மேலும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினரின் கொடுமைகளில் இருந்து காப்பாற்ற, உடனடியாக இந்திய கடற்படைத் தளம் ஒன்றினை தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் அமைக்க வேண்டும்.மீனவர் பிரச்னைக்கு இது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும்.
இந்திராகாந்தி போல
பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது, தமிழக எல்லைப் பகுதிக்குள்ளேயே வந்து சிங்களக் கேப்டன் ஒருவர், தமிழக மீனவர்களைக் கைது செய்து கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த இந்திராகாந்தி, சிங்களக் கேப்டனைக் கைது செய்ய உத்தரவிட்டார். அந்தக் கேப்டனைக் கைது செய்து, மண்டபம் சிறையில் வைத்தனர்.அதன் பிறகு, கேப்டனையும், இலங்கை வீரர்களையும் மன்னிப்புக் கேட்க வைத்தே அவர்களை இலங்கை அரசு திரும்பப் பெற்றது.
இந்தச் சம்பவத்தை இந்திய அரசும் தமிழக அரசும் நினைவில் கொண்டு, தற்போதும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே, இலங்கை அரசு வழிக்கு வரும்.என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications