வெங்காய விலை எவ்வளவு அதிகரித்தாலும் கவலைப்படாத பீகார் கிராமம்
பாட்னா: நாட்டு மக்கள் எல்லாம் வெங்காய விலையை நினைத்து கவலைப்படுகையில் பீகாரில் உள்ள ஒரு கிராமம் மட்டும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படவே இல்லை.
தங்கத்தை அடுத்து வெங்காய விலை உயர்வு தான் மக்கள் கண்ணில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் உள்ள பீம்சென் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இந்த விலை உயர்வை பற்றி கவலை இன்றி உள்ளனர். காரணம் அவர்கள் பல ஆண்டுகளாக வெங்காயமே சாப்பிடுவது இல்லையாம்.
சுமார் 200 வீடுகள் உள்ள அக்கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் பிரசாத் சிங் கூறுகையில், வெங்காய விலை உயர்வு எங்களுக்கு கவலை அளிக்கவில்லை. அதை நாங்கள் எங்கள் உணவில் பயன்படுத்துவதில்லை என்றார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த ராமேஷ்வர் சிங் கூறுகையில், நாங்கள் சுமார் 200 ஆண்டுகளாக வெங்காயம் பயன்படுத்தவில்லை என்றார்.
அந்த கிராமத்தை கொடிய நோய் தாக்கியபோது இனி வெங்காயமே சாப்பிடக் கூடாது என்று 200 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு செய்துள்ளனர். அந்த நோய் ஆண்டவனின் சாபம் என்றும், அதில் இருந்து தப்பித்து இறைவன் அருளைப் பெற வெங்காய பயன்பாட்டை நிறுத்தியதாகவும் ஒருவர் தெரிவித்தார்.
பீகாரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-60 வரை விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications