விளையாட்டுச் சண்டையில், 6 வயது தோழியை சுட்டுக் கொன்ற 7வயது சிறுமி
ஜோகன்ஸ்பார்க்: தென் ஆப்பிரிக்காவில், தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற 7 வயது சிறுமி ஒருத்தி கோபத்தில் தனது சகதோழியைச் சுட்டுக் கொன்றுள்ளாள். இதனால் அச்சிறுமி மீதும், அவளது தாத்தா மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.
சுமார் 5 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தென் ஆப்பிக்காவில் கிட்டத்தட்ட 50 லட்சத்து 95 ஆயிரம் பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். ஆனால், முறைப்படி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களில் 30 லட்சத்து 73 ஆயிரம் பேர் மட்டுமே.
தென் ஆப்பிரிக்கா, பிரயோரியா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, லிம்போபோ மாகாணத்தின் பேலா பேலா என்ற கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தாள். ஒருநாள் அச்சிறுமி அங்குள்ள பண்ணையில் தனது 6 வயது தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, இருவருக்குமிடையே பிரச்சினை உருவாகியுள்ளது.
பிரச்சினையினால் கோபமடைந்த சிறுமி, வீட்டிற்குள் சென்று தாத்தாவின் துப்பாக்கியை எடுத்து வந்து தனது தோழியைச் சுட்டிருக்கிறாள். இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கவனக்குறைவாக துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்திற்காக சிறுமியின் தாத்தா மீதும், அச்சிறுமி மீதும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
குழந்தைகளின் கைக்கெட்டும் தூரத்தில் இது போன்ற அபாயகரமான பொருட்களை வைப்பது விபரீதங்களை உருவாக்கும் என்பதற்கு இச்சம்பவம் இன்னுமொரு உதாரணம்.












Click it and Unblock the Notifications