முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தக்கோரி தவ்ஹீத் ஜமாத் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி ஜனவரி 28ம் தேதி தமிழகத்தில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழ்நாடு தவ்ஹீ்த் ஜமாத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஆர். ரஹ்மதுல்லாஹ் தலைமையில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா அவர்கள் அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும்,
இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும்,
2014ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய நான்கு நகரங்களில்
20 லட்சம் முஸ்லீம்கள் பங்கேற்கும் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என செய்ற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுவையில், முஸ்லீம்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை வலியுறுத்தி அதே ஜனவரி 28ம் தேதி, 2014ம் ஆண்டு அன்று புதுவையிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மட்டுமின்றி லட்சக்கணக்கான பெண்களும் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று ரஹ்மதுல்லாஹ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.