பெண்களுக்கு பாதுகாப்பில்லையென்றால் நம்மை ஆண்கள் என அழைப்பதே கேவலம்!- மோடி
அகமதாபாத்: இந்த நாட்டில் வாழும் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லையென்றால் நம்மையெல்லாம் ஆண்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தமே இல்லை என நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் சோட்டா உதய்பூர் என்ற மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது. இதற்காக அம்மாவட்ட மக்கள் மோடிக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியது:
சீதையும், சாவித்ரியும் வாழ்ந்த தேசம் இது. ஆனால் இன்றோ நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு என்பது தற்போது மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
நான் அரசியலுக்காக இதை கூறவில்லை. நாம் வீட்டில் இல்லாதபோது நமது சகோதரிகள் தனியாக தங்கியிருக்கும் வேளைகளில் அவர்களால் பயமின்றி நிம்மதியாக இருக்க முடிவதில்லையே... ஏன் இந்த அவல நிலை?
இதே நிலை நீடித்தால், ஆண்கள் என்று நம்மை அழைத்துக் கொள்வதில் அர்த்தமே இல்லை. கணவன் என்று சொல்லிக்கொள்ளக் கூட நமக்கு உரிமை இல்லை. இதைவிட செத்துப் போகலாம்.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு காரணம் பெண்களே என வக்கிரபுத்தி படைத்த சிலர் கூறி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் பெண்கள் காரணமல்ல. ஆண்களுக்குள் இருக்கும் கேவலமான புத்திதான் காரணம்.
இதைப்போன்ற கேவலமான எண்ணங்களை எதிர்த்து போராட இந்த சமூகம் முன்வர வேண்டும்.
பெண்களை தவறாக சித்தரிப்பதும், பயன்படுத்துவதும் இந்த சமூகத்தின் மீது படிந்துள்ள நீங்காத கரையாக தொடர்ந்துக் கொண்டே வருகிறது. இந்த கரையை நீக்க நாம் கூட்டுப் பொறுப்புடன் போராட வேண்டிய வேளை இது," என்றார் மோடி.












Click it and Unblock the Notifications