தீக்கிரையான மின் நிலையம் - இருளில் மூழ்கிய 50 கிராமங்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே துணை மின் நிலையம் தீயில் சேதமடைந்ததால், 50 கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளன.
வேடசந்தூர் சேனன்கோட்டையில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான புதுக்கோட்டை, அய்யர்மடம், விருதலைப் பட்டி, காசிப்பாளையம், தேவிநாயக்கன்பட்டி, தாசிரிபட்டி, குட்டம், கருக்கம் பட்டி, சேனன்கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
வேடசந்தூர் நகரில் உள்ள ஏராளமான தனியார் ஸ்பின்னிங் மில்கள் மற்றும் தனியார் மில்களுக்கு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏற்ப்பட்ட ஆயில் கசிவின்காரணமாக எதிர்பாராத விதமாக தீப்பிடிக்கத் தொடங்கியது.
இந்த தீ சிறிது நேரத்துக்குள் மளமளவென பற்றி எரியத்தொடங்கியது. டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரிவதை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகத்தை துண்டித்தனர்.
பின்னர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததோடு வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயை அணைக்க போராடினர். இருந்தபோதிலும் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. இந்த சம்பவத்தை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கூடிவிட்டனர். மேலும் அருகில் இருந்த வீடுகளில் வசித்த மக்கள் பாதுகாப்புக்காக வேறு இடத்திற்கு ஓடத்தொடங்கினர்.
துணை மின் நிலையத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தால் இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 50 கிராம பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இது குறித்து மின் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில் தீ முழுவதும் அணைக்கப்பட்டு டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கப்பட்டோ? அல்லது புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவினால்தான் மின்வினியோகம் சீராகும் .மாற்று ஏற்ப்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து மின்வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.மேலும் மின் விநியோகம் தாமதமின்றி வழங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications