நீங்கள் கைவிட்டால் நாங்களும் கைவிடும் நிலை ஏற்படும் - காங்.குக்கு கருணாநிதி எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை காங்கிரஸ் நிறைவேற்றாமல் கைவிட்டால், நாம் அவர்களைக் கைவிடும் நிலை ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் பொன்விழா நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு கருணாநிதி ஆற்றிய உரை...:

Karunanidhi

சேது சமுத்திரத் திட்டம் ரூ.2,457 கோடியில் தொடங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இந்தத் திட்டம் நிறைவேறும் சூழலில், முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றார். இது தமிழர் நலன் மீது அக்கறை உள்ள செயல் இல்லை.

ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய அரசு இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை. சேதுத் திட்டத்தைக் கைவிடாதீர்கள் என்று மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் வரை காத்திருப்போம். ஒருவேளை, சேதுத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டால், நாங்களும் உங்கள் (காங்கிரஸ்) கையை விட்டு விடுவோம். இது ஒன்றும் பயமுறுத்தல் இல்லை. பாசத்தின் காரணமாக விடுக்கும் எச்சரிக்கை.

தமிழர்கள் வாழ வேண்டும், வாணிபம் செழிக்க வேண்டும் என்றால் சேது திட்டம் கட்டாயம் வேண்டும்.

திமுகவோடு விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தோழமை இயக்கங்கள் எல்லாம் சேர்ந்துதான் மக்களவைத் தேர்தலில் வெற்றியை நிலை நிறுத்த வேண்டும். அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததுபோல, விழாவில் எனக்கு தங்க நெல்லிக்கனி கொடுக்கப்பட்டது. இது தங்கக்கனி (வி.சிறுத்தைகள்) என்பதால் என்னிடத்திலே தங்கட்டும் என்று அறிவாலயத்தில் உள்ள கருவூலத்தில் சேர்த்து விடுவேன்.

தங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும் இதை ஒன்றும் அசைக்க முடியாது, இது அப்படியே இருக்கும். விற்கவோ, வாங்கவோ முடியாது. ஏனெனில், இது திமுகவின் சொத்து.

விடுதலைச் சிறுத்தைகள் திமுகவை விட்டுப் பிரியப் போவதுமில்லை. பிரிய விடப் போவதுமில்லை. திருமாவளவன் அயோத்திதாசர் பண்டிதரைப்போல நீண்ட ஆயுளும், புகழும் பெற்று வாழவேண்டும்.

இந்தக் கூட்டத்தில் திருமாவளவன் தன் வேதனைகளைப் பட்டியலிட்டார். என்னுடைய பட்டியல் மிக நீளமானது என்பதை அவருக்குக் கூறிக் கொள்கிறேன். இது திருமாவளவனுக்கும் தெரியும். தெரிந்த காரணத்தால்தான் அந்தப் பட்டியலோடு திருமாவளவன் போட்டி போடுகிறார். திமுகவை அதன் தோழமைக் கட்சிகளோடு சேர்ந்து அழித்துவிடலாம் என சில தலைவர்கள் மனப்பால் குடிக்கின்றனர். அது நடக்காது.

உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரித்ததன் மூலம் மக்களை திமுக ஏமாற்றிவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார். உணவு மசோதாவை எதிர்க்கிறோம் என்று கூறுபவர்கள் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்ற போது எதிர்ப்பதாகக் கூறி, வெளிநடப்புச் செய்திருக்க வேண்டும். அதைவிட்டு, மதோசா நிறைவேற்றப்பட்டபோது கையொலி எழுப்பிவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பதாகக் கூறுகின்றனர்.

இது 70 கோடி மக்கள் பயன்பெறும் திட்டம். அதனால்தான் மணிமேகலை திட்டம் எனக் கூறுகிறேன். தமிழக அரசு ஏழைகளுக்காகப் பாடுபடும் ஆட்சியாக இல்லை. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக உள்ளது.

நம்மை (திராவிடக் கட்சிகள்) தொடவே மாட்டோம் என்று கூறிய தலைவர் (ராமதாஸ்)கூட, அரசுக்கு எதிராக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதும் அளவுக்கு நிலைமை உள்ளது. எல்லோரும் சேர்ந்துதான் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவனுக்காக அளிக்கப்பட்ட 51 பவுன் தங்கச் சங்கிலியை திருமாவளவனுக்கு கருணாநிதி அணிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+