கந்து வட்டி தகராறு; சைதாப்பேட்டை தொழில் அதிபர் கொலை
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் கந்துவட்டித்தகராறில் தொழிலதிபர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சைதாப்பேட்டை குமரன் நகர் சுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் வீரப்பன் (50). தொழில் அதிபர். இவர் கந்து வட்டி தகராறில் 31-ந்தேதி இரவு 11 மணிக்கு 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து குமரன் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் ஜெயின் வழக்குப் பதிவு செய்து ஆனந்த், ஜெகன், மூர்த்தி, அருள் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் மாரிமுத்துவும், சண்முகமும் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை பிடிக்க கிண்டி உதவி கமிஷனர் சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆனந்தின் உறவினர் ஒருவர் கூறும் போது தலைமறைவாக இருக்கும் மாரிமுத்துவும், சண்முகமும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைய வாய்ப்பு உள்ளதாக கூறினார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மாரிமுத்துவின் மனைவி மற்றும் உறவினர்கள், சண்முகத்தின் மனைவி ரேவதி (22) அவரது உறவினர்களிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.