ஜி-20 மாநாடு: பிரதமர் மன்மோகன் சிங் நாளை ரஷ்யா பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமையன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்கிறார்.
இந்த பயணத்தின்போது பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்க தலைவர்களையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 8வது ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இதில் உலகப் பொருளாதார நிலை, கரன்சி மார்க்கெட்டில் ஏற்பட்டு வரும் சரிவு உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
பிரிக் நாடுகள் எனப்படும் இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றின் தலைவர்களும் இந்த மாநாட்டின்போது சந்திக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

இந்த ஐந்து வளரும் நாடுகளின் தலைவர்களும் தங்களது நாடுகள் ஒருங்கிணைந்து 1000 பில்லியன் டாலர் அளவுக்கு நாணயக் கையிருப்பு நிதியை உருவாக்குவது என்று கடந்த மார்ச் மாதம் டர்பன் நகரில் நடந்த பிரிக் மாநாட்டின்போது முடிவு செய்தது நினைவிருக்கலாம். அஏதுகுறித்து இப்போது அவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது எழுந்துள்ள நாணய மதிப்புச் சரிவில் இந்த நாடுகள் அனைத்துமே சிக்கியுள்ளன. இந்தியாவில் ரூபாய் மதிப்பு குறைந்தது போல இந்த நாடுகளிலும் நாணய மதிப்பு சரிந்துள்ளது.
இந்தியா தவிர அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்யா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் ஆகியவை ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications