ஆப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய கப்பல் கேப்டன்: கண்ணீரில் குடும்பம்
மும்பை: இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டன் டோகோ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே லாகோஸ் என்ற இடத்தில் சென்ச்சுரியன் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.
கடற்படை அதிகாரிகள் போன்று உடை அணிந்து 30 முதல் 35 கொள்ளையர்களை கப்பலுக்குள் வந்துள்ளனர்.

ஒரு நாள் சிறைப்பிடிப்பு
கடற்கொள்ளையர்கள் கேப்டன் சுனில் மற்றும் மாலுமிகளை ஒரு நாள் சிறைப்பிடித்து வைத்து அதன் பிறகு அவர்களை விடுவித்துள்ளனர்.

டோகோ
ஜூலை 31ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப்பலை நிறுத்திவிட்டு வந்த சுனில் அந்நாட்டு கடலோரக் காவல்படையால் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மாலுமிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

செய்யாத குற்றம்
சுனில் கடற்கொள்ளையர்களுடன் சேர்ந்து சதி செய்ததாகக் கூறி அவரை டோகோ நாட்டு சிறையில் அடைத்துவிட்டனர். அவர் தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக சிறையில் தான் உள்ளார்.

என் கணவரை காப்பாற்றுங்கள்
டோகோ நாட்டு சிறையில் வாடும் தனது கணவரை காப்பாற்றுமாறு சுனிலின் மனைவி அதிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

குர்ஷித்
சுனில் மற்றும் மாலுமிகளை மீட்க டோகோ அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications