தீபாவளி: சொந்த ஊரில் இருந்து திரும்பிவர ரயிலில் டிக்கெட் இல்லை… சிறப்பு ரயில் இயக்கப்படுமா?
சென்னை: தீபாவளிக்கு பண்டிகைக்கு சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற மக்கள் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவதற்கான டிக்கெட் முன்பதிவு 5 நிமிடத்தில் முடிந்தது. டிக்கெட் முன்பதிவிற்காக விடிய விடிய ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தமடைந்தனர்.
வரும் நவம்பர் 2ம் தேதி தீபாவளி பண்டிகை திருநாளாகும். சென்னையில் பணி நிமித்தமாக குடியேறிய அனைவரும் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். அக்டோபர் 30ம் தேதி முதல் சென்னையில் தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் பண்டிகை முடிந்து நவம்பர் 3ம் தேதி இரவு சென்னை திரும்புகின்றனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

விடிய விடிய
இதற்காக ரிசர்வேசன் கவுண்டர்களில் நள்ளிரவு முதலே காத்திருந்தனர். அதேபோல் ஆன்லைனில் ரிசர்வேசன் செய்யவும் பலர் கம்யூட்டர் முன்பு தவமிருந்தனர்.

5 நிமிடத்தில் …
ஆனாலும் டிக்கெட் புக்கிங் 5 நிமிடத்தில் முடிந்துவிட்டது. இதனால் பல்லாயிரக்காணோர் ஏமாற்றமடைந்தனர். பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அரசு பேருந்து
இதனிடையே தீபாவளிக்கு வெளியூர் செல்ல அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு தொடங்கியது. ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. இதையடுத்து, பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் பஸ்களை நம்பியுள்ளனர்.

700 சிறப்பு பஸ்கள்
இந்த தீபாவளிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மொத்தம் 700 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் விரைவு போக்குவரத்து கழகம் 200 சிறப்பு பஸ்களையும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 350 சிறப்பு பஸ்களையும் இயக்கவுள்ளன. 300 கி.மீ மேல் விரைவு போக்குவரத்து கழகம் மட்டுமே இயக்க வேண்டுமென்பதால், மற்ற போக்குவரத்து கழகங்களின் 150 சிறப்பு பஸ்களையும் ஒருங்கிணைத்து விரைவு போக்குவரத்து கழகம் இயக்கும் என்று கூறப்படுகிறது.

தென்மாவட்டங்களுக்கு டிக்கெட்
கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நீண்ட தூர பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி டிக்கெட்களுக்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. tnstc.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

20 இடங்களில் முன்பதிவு
சென்னையில் கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றியூர், தி.நகர், பிராட்வே, தாம்பரம் உட்பட 20 இடங்களில் உள்ள பஸ்நிலையங்களில் முன்பதிவு செய்யலாம். மக்களின் வசதிக்காக முன்பதிவு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications