இனி, இதயம் சம்பந்தப்பட்ட எல்லா நோய்களுக்கும் ஒரே மாத்திரை போதுமாம்....
லண்டன்: இதய நோயாளிகளுக்கோர் இனிப்பான செய்தியாக எல்லாவகையான இதய நோய்களுக்கும் பொதுவானதொரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இரத்தக் கொதிப்பு, இரவில் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க ஆஸ்பிரின் என இனி தனித்தனியாக மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். ஏனென்றால் சில நேரங்களில் நிறைய மாத்திரை எடுத்துக் கொள்ளும் நோயாளிகள், மறதியில் சில மாத்திரைகளைச் சாப்பிட மறந்து விடுவதுண்டு. அதனால், உருவாகின்ற பின் விளைவுகளால் அவர்கள் அல்லலுற வேண்டிய நிலை உருவாகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இந்த புதிய மருந்து உருவாக்கப் பட்டுள்ளது.
பாலிபில்....
பல மருந்துகளின் செயலைச் செய்யும் வல்லமைப் பெற்ற இந்த மருந்துக்கு ‘பாலி பில்' என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
திருப்திகரமான முடிவுகள்...
ஐரோப்பா மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இதன் முடிவுகள் திருப்திகரமாக அமைந்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள பிரபல மருத்துவ கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், பி ஜி ஐ சண்டிகார் மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் குளோபல் ஹெல்த்- இந்தியா போன்றவை இந்த ஆய்வில் பங்கெடுத்தன.
லண்டனில் தொடக்கப்பட்ட திட்டம்....
இந்த மருந்துத் திட்டம் லண்டனில் உள்ள இம்பீரியல் காலேஜ் சார்பில் திட்டமிடப்பட்டது. மருந்துக்கான திட்ட சமன்பாடு டாக்டர் ரெட்டி ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டது.
சரிவிகித மருந்து....
இந்த பாலிபில்லில் ஆஸ்பிரின், ஸ்டாடின் மற்றும் இரண்டு வகையான இரத்தக் கொதிப்பைக் குறைக்கும் மருந்துகள் சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
62 வயது இதய நோயாளிகள்....
இந்த ஆய்வில், 62 வயதில் உள்ள சிவிடி எனச் சொல்லப்படுகிற இதய நோயாளிகள் 2004 பேர் பங்கெடுத்துக் கொண்டார்கள். இந்த ஆய்வு கடந்த 2010 மற்றும் 2011ம் வருடக்களில் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப் பட்டது.
விளைவுகளும், பயன்களும்....
அதனைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், இதய நோய் மருந்தின் விளைவுகள், பாதிப்புகள் மற்றும் பயன்கள் ஆகியவைக் கண்டறியப்பட்டன.