சென்னை: லாரியை கடத்தி ரூ.6 கோடி மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் கொள்ளை
சென்னை: சென்னையில் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்யூட்டர்களுடன் லாரி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை இரவு 2 கண்டெய்னர் லாரிகளில் கம்ப்யூட்டர்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.
ஒரு லாரியில் மட்டும் ரூ.6 கோடி மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் இருந்தன. இவைகளை மாதவரத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லும் வழியில் மாதவரம் பால்பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் சந்திப்பில் டிரைவர் லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
வியாழன்று காலையில் இந்த லாரியை திடீரென காணவில்லை. டிரைவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை. இது பற்றி மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் காசியப்பன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மாயமான கண்டெய்னர் லாரியை கண்டுபிடிப்பதற்காக அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இந்நிலையில் காணாமல் போன லாரி வியாழக்கிழமை இரவு அலமாதியில் கண்டுபிடிக்கப்பட்டது. சாலை ஓரமாக நின்ற லாரியின் கண்டெய்னர் திறந்து கிடந்தது. அதில் இருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
லாரி டிரைவரின் துணையுடன் கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மஞ்சம்பாக்கத்தில் நிறுத்தியிருந்த போது, கொள்ளையர்களின் சிக்னல் கிடைத்தவுடன் டிரைவர் லாரியை அங்கிருந்து அலமாதிக்கு கடத்திச் சென்றுள்ளார். பின்னர் கண்டெய்னரை உடைத்து அதில் இருந்த கம்ப்யூட்டர்களை வேறு லாரியில் ஏற்றி கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது. பெரிய அளவில் ‘நெட்வொர்க்' அமைத்து கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட கம்ப்யூட்டர் பொருட்களை வேறு எங்காவது கொண்டு சென்று கடத்தல் ஆசாமிகளிடம் கொள்ளையர்கள் விற்பனை செய்துவிட்டனரா? அல்லது குடோனில் கம்ப்யூட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு நகைக்கடைக்கு கொண்டு வந்த லாரியை கடத்தி 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கடத்திச் சென்றனர் இந்த நிலையில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கடத்தி கொள்ளையடித்தனர். பின்னர் கொள்ளையர்களை பிடித்து நகைகளை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.