பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோயில் தங்கத்தை பயன்படுத்துக- செப்.13-ல் ஆர்ப்பாட்டம்!
சென்னை: இந்தியாவின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 13-ந் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.வி.க.வின் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலர் விடுதலை ராசேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், நாட்டின் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பெரு முதலாளிகள் ஆகியோருக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும், நாட்டின் கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோயில் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி வரும் 13-ந் தேதியன்று தமிழகம் முழுவது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.