மறுபடியும் மொதல்ல இருந்து… 15 நாட்களில் மின் உற்பத்தி….: நாராயணசாமி!
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இன்னும் 15 நாட்களுக்குள் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என்று மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி,"கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டம் முடிவடைந்துவிட்டது. எனவே இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் அங்கு மின் உற்பத்தியை தொடங்கிவிடுவோம் என்றார்.
அங்கு மின்சார உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும். 2வது யூனிட்டில் 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. எனவே 2வது யூனிட்டில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
நாராயணசாமி சென்னை வரும்போதெல்லாம் இன்னும் 15 நாட்களில் கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும்" என்று கூறுவார்.
கடந்த ஒருவருடமாக எத்தனையோ 15 நாட்களை கடந்துவிட்டபோதிலும் மின் உற்பத்தி தொடங்கியபாடில்லை. இதை வைத்து டுவிட்டர், ஃபேஸ்புக்குகளில் நக்கலடிப்பார்கள். இதனையடுத்து இந்த 15 நாள் டயலாக்கை சில வாரங்களாக சொல்லாமல் இருந்து வந்தார்.
தற்போது கூடங்குளம் அணு மின் உலையின் முதல் யூனிட் கட்டுமான பணிகள் முடிவடைந்து, அணுமின் கழகத்தின் ஒப்புதலுடன் சோதனை ஓட்டம் நடந்து வந்தது. இங்கு கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலேயே மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் இன்னும் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. இந்த முறையாவது அவர் சொன்னது பலிக்குமா என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications