தமிழைப் புகழ்ந்த இந்தி எம்.பிக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை: ராஜ்யசபாவில் தமிழைப் புகழ்ந்தும், தமிழை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக வலியுறுத்திப் பேசிய உத்தரகாண்ட் பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தருண் விஜய் பேச்சை அறிந்து மகிழ்ந்து போய் விட்டாராம் கருணாநிதி. உடனடியாக அவர், திமுக எம்.பி. கேபி.ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு தருண் விஜய்யை நேரில் சந்தித்து தனது பாராட்டுக்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.
வட இந்தியர் ஒருவர் செம்மொழி தகுதி பெற்ற தமிழின் சிறப்புகளைப் பாராட்டிப் பேசியதால் தான் மகிழ்ந்து போனதாகவும், தனது பாராட்டுகளை அவருக்குத் தெரிவிக்கும்படியும் கே.பி.ராமலிங்கத்திடம் கூறியுள்ளார் கருணாநிதி. இதையடுத்து ராமலிங்கம், தருண் விஜய்யை சந்தித்து கருணாநிதியின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த தருண் விஜய்யும், கருணாநிதிக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முனைப்புடன் நடத்திய இயக்கம் திமுக என்ற போதிலும், தமிழைப் புகழ்ந்த இந்தி எம்.பிக்கு முதல் ஆளாக திமுகதான் பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.