கணவரின் கள்ளக்காதலால் மனைவி தற்கொலை செய்தால் கணவர் பொறுப்பல்ல - சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கணவரின் கள்ளக்காதலால் மனம் உடைந்து மனைவி தற்கொலை செய்து கொண்டால் அதற்கு கணவர் பொறுப்பாக முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
மனைவி தற்கொலை செய்து கொண்டால் அதற்காக கணவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய முடியாது. அதேசமயம், தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் செயல்பட்டால் மட்டுமே கணவர் மீது வழக்குத் தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குஜராத் கள்ளக்காதல்
குஜராத்தைச் சேர்ந்தவர் பினாகின் மஹிபத்ராய் ராவல். இவர் தன்னுடன் வேலை பார்த்த பெண்ணுடன் கள்ளக்காதலில் மூழ்கியிருந்தார்.

மனைவி தற்கொலை
இதை அறிந்த ராவலின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ராவல் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

மாடியிலிருந்து குதித்து
மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்ட ராவலின் மனைவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதத்தில், ராவல் குறித்து குற்றம் சாட்டவில்லை. அதேசமயம், ராவலின் கள்ளத் தொடர்பு குறித்து மட்டும் குறிப்பிட்டிருந்தார்.

கைது -விசாரணை - தண்டனை
இதையடுத்து ராவல் மீது நடந்த விசாரணையில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராவல் அப்பீல் செய்தார். அங்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்
இதையடுத்து உச்சநீதி்மன்றத்தில் அப்பீல் செய்தார் ராவல். அதை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச்தான் மேற்கூறிய தீர்ப்பை அளித்தது.

தற்கொலைக்கு எப்படி பொறுப்பாவார்...
நீதிபதிகள் அளித்த உத்தரவில், ஒரு கணவர் கள்ளக்காதலில் ஈடுபட்டிருக்கிறார், மனைவியைப் புறக்கணிக்கிறார், இதனால் அவரது மனைவி தற்கொலை செய்கிறார் என்பதற்காக அந்த நபரை குற்றவாளியாக கருத முடியாது.

கொடுமைப்படுத்தினார், தூண்டினார் என்றால்...
மனைவியை கள்ளக்காதல் தொடர்பாக கொடுமைப்படுத்தினார், தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டினார் என்றால் மட்டுமேவழக்குத் தொடர முடியும்.

அதேசமயம்...
அதேசமயம், ஐபிசி 498ஏ பிரிவின்படி ஒரு மனைவிக்கு உடல் ரீதியாக மட்டும்தான் துன்புறுத்தலை அளிக்க வேண்டும் என்றில்லை. மன ரீதியாக துன்புறுத்தினாலும் கூட அது கிரிமினல் குற்றம்தான். அதேசமயம், அந்தப் பெண் தற்கொலை செய்யும் அளவுக்கு மன உளைச்சல் கொடுத்தால் மட்டுமே அதை குற்றச் செயலாக பார்க்கலாம்.

காவல்துறையின் தவறு
மேலும் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கில் ராவலின் கள்ளத் தொடர்புகள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி சமர்ப்பிக்க காவல்துறை தவறி விட்டது. ஒருவேளை அப்படியே திரட்டியிருந்தாலும் கூட அது ராவலின் தனிப்பட்ட நடத்தை சம்பந்தப்பட்டதாகவே இருக்க முடியும். இதையே ராவலின் மனைவி தற்கொலைக்குக் காரணம் என்று கூற முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications