ஜெயலலிதா பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது: சொல்கிறார் நாஞ்சில் சம்பத்
தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதா பிரதமராவதை தடுக்கத்தான் உணவுப் பாதுகாப்பு மசோதா அவசரம் அவரசமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது என்று அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் கோவில்பட்டியில் சாதனை விளக்க பொது கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் சோனியா நிறைவேற்றியிருக்கும் உணவு பாதுகாப்பு திட்டம் தமிழகத்திற்கு எதிரான திட்டம்.
உணவு பாதுகாப்பு மசோதாவை அவசர அவசரமாக நிறைவேற்றியது முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக வந்துவிடக்கூடாது என்று தடுப்பதற்கான செயலாகும். இந்த திட்டத்தால் ஒரு லட்சம் டன் அரிசி கழிவாக போய்விடும். தமிழகத்தில் தற்பொழுதுள்ள பொதுவிநியோகத்திட்டமே போதுமானது.
பிரதமரான மன்மோகன் சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு ராகுல் தலைமையிலான அரசியலுக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அவர் சோனியாவின் ஆலோசனையை கேட்காமல் எதையுமே செய்யமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே. இலைமறைகாயாக இருந்த இந்த நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
பணவீக்கத்திற்கும், பொருளாதார சரிவிற்கும், விலைவாசி உச்சத்திற்கும் காரணமே மன்மோகன்தான். தமிழின தலைவன் என்று சொல்லிக் கொண்டு ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது கண்டு கொள்ளாமல் இருந்த கருணாநிதியும், சோனியாவும் இணைந்து முதல்வர் ஜெயலலிதா பிரதமராவதைத் தடுக்கலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். அது பலிக்காது. வரும் எம்.பி தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும்" என்றார் நாஞ்சில் சம்பத்.
ம.தி.மு.க.வில் இருந்த பொழுது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமுறை பேசிய இடம் கோவில்பட்டி. தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும், தே.மு.தி.க.வையும் வாய்மொழியால் அர்ச்சித்த இடம் கோவில்பட்டி.
அ.தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராக பொறுப்பேற்றதும் அதே கோவில்பட்டியில் இன்று தி.மு.க.வையும், ம.தி.மு.க.வையும், தே.மு.தி.கவையும் விமர்சிக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க கரை வேட்டியில் அ.தி.மு.க தோரணையில் முதன்முதலில் பேச ஆரம்பித்தார் நாஞ்சில் சம்பத்.












Click it and Unblock the Notifications