மேடம் உங்களுக்கு ஸ்கூட்டி பரிசு! செல்போனில் வலைவிரிக்கும் மோசடி கும்பல்! உஷாரா இருக்கனும் மக்களே!
அரியலூர்: அரியலூரில் ஆசைவார்த்தை கூறி பண மோசடி செய்த 14 பேர் கொண்ட கும்பலை, போலீசார் கைது செய்தனர். கைதான அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம், பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ரோஸ்லின் என்பவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோப்பு விற்பனை செய்யும் ஒரு கும்பல் அணுகியுள்ளது. தங்களிடம் சோப்பு வாங்கினால் பரிசு கூப்பன் வழங்கப்படும் என கூறியுள்ளனர்.
அந்தக் கூப்பனில் பரிசுகள் விழுந்தால் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் குக்கர், குத்துவிளக்கு போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறி சோப்புகளை விற்பனை செய்துள்ளது. மேலும், சோப்புகளை வாங்கியவர்களிடம் இருந்து செல்போன் எண்ணையும் அந்த கும்பல் வாங்கிச் சென்றுள்ளது.

சோப்பு விற்பனை கும்பல்
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, ரோஸ்லினியிடம் செல்போனில் தொடர்பு கொண்ட சோப்பு விற்பனை கும்பல், உங்கள் செல்போன் எண்ணிற்கு ஸ்கூட்டியும், தங்கக் காசும் பரிசாக விழுந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், அதற்கான ஜிஎஸ்டி தொகையாக 14,860 ரூபாயை அனுப்ப வேண்டும் என்று கூறி, தங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் அந்த கும்பல் கூறியுள்ளது.

பணம் செலுத்தி ஏமாந்த பெண்
இதனையடுத்து, ரோஸ்லின், நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள்? என கேட்டபோது, தங்களது பெயர்களை அந்தக் கும்பல் கூறியுள்ளது. எனினும், சந்தேகம் அடைந்த ரோஸ்லின், பணத்தை அந்த கும்பலுக்கு அனுப்பவில்லை. இதனால் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த கும்பல், ரோஸ்லினை வங்கிக் கணக்கு பணம் அனுப்புமாறு மீண்டும் ஆசை வார்த்தை கூறி வலியுறுத்தியுள்ளது. இதனை நம்பி, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு ரூ.14,850 ரோஸ்லின் செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் கூறியவாறு பரிசுப் பொருட்கள் வரவில்லை.

காவல் நிலையத்தில் புகார்
இதனால் அதிர்ச்சியடைந்த ரோஸ்லின், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இதுகுறித்து உடனடியாக கீழப்பழூவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கீழப்பழூவூர் போலீசார் மற்றும் சைபர் கிரைம் போலீசார் இணைந்து விசாரணையை தொடங்கினர். மர்ம நபர்களின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு, அவர்களின் இருப்பிடம் குறித்து தெரிந்து கொண்டனர். பின்னர் அந்த கும்பலை அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்று சுற்றிவளைத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

14 பேர் கொண்ட கும்பல்
கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. சண்முகவேல், சின்ன ராமசாமி, மாரியப்பன், ஜெயக்குமார், விவேகானந்தன், சுரேஷ்குமார், சின்ன சுடலை, குருநாதன், மாடசாமி, இசக்கி முத்து, ரஞ்சித் குமார், முப்புடாதி, காளிமுத்து ஆகியோர் கூட்டாக சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டது வந்ததும் தெரியவந்தது.

கைது - சிறையில் அடைப்பு
மேலும், இந்தக் கும்பல், பல்வேறு இடங்களில் இதுபோன்று பண மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்ட 14 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குக்கர்கள், செல்போன்கள் மற்றும் 9 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications