வேல்முருகன் கடும் ஆவேசம்.. புதுக்கோட்டை பெண்ணுக்கு ரூ 50 லட்சம் நிவாரணம் வழங்குங்க! என்ன நடந்தது?
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் இந்த கொடூர செயலை வன்மையாக கண்டித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைப்பதோடு, தமிழக அரசு அவருக்கு உடனடியாக ரூபாய் 50 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே தனியார் அரிசி ஆலையில் பணிபுரிந்து வரும் 35 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண், பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை தமிழகமெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டுபண்ணி வருகிறது.

புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி
சம்பவத்தன்று, பணி முடிந்து பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வன்கொடுமைக்குள்ளான பெண் கறம்பக்குடி - ஆலங்குடி சாலையில் தள்ளி விடப்பட்ட நிலையில், அந்த வழியாக சென்றவர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மாரிமுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சேகரை திண்டுக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.
கறம்பக்குடி - வன்கொடுமை
இருந்தாலும், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சேகர் கைது செய்யப்பட்டதில் சந்தேகம் இருப்பதாகக் கூறியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும் பொதுமக்களும் மழையூர் காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.. இந்த கொடூர சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 50 லட்சம் நிவாரணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் உடனே வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்..
தவாக வேல்முருகன்
இதுகுறித்து வேல்முருகன் விடுத்துள்ள அறிக்கையில், "புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத 35 வயதான, வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், அரிசி ஆலையில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 17ம் தேதி பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக காரில் சென்ற கறம்பக்குடி மணக்கொல்லையைச் சேர்ந்த சேகர் (56) மற்றும் மாரிமுத்து (55) ஆகியோர் அவரை காரில் வீட்டுக்கு கொண்டு சென்று விடுவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் அப்பெண்ணை காருக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போராடிய அப்பெண்ணை தாக்கி, கறம்பக்குடி - ஆலங்குடி சாலையில் இறக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
அந்த வழியாக வந்த தலைமை காவலர் வாசுகி, அப்பெண்ணை மீட்டு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
தமிழக அரசு ரூ.50 லட்சம்
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல்துறையினர் கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர். பின்னர் திண்டுக்கல்லில் சேகரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு மழையூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் ரூ 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்து, வழக்கை விரைந்து முடித்து அதிகபட்ச தண்டனை வழங்கிட காவல்துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications