ஏமாளிகள் இல்லை.. பதறிய பாஜக.. நயினாருக்கு போன் போட்ட எடப்பாடி பழனிசாமி
அரியலூர்: தமிழ்நாடு தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் இருப்பதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். முக்கியமாக பாஜக கூட்டணி ஆட்சி என்ற கருத்தை தொடர்ந்து கூறி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இது பாஜக வட்டாரத்தை பதற வைத்துள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நயினார் நாகேந்திரனுக்கு விளக்கம் அளித்துள்ளாராம்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ளது. அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே தேர்தலுக்கு தயாராகிவிட்டன. திமுக ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தை மீட்போம். மக்களை காப்போம் என்கிற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திமுக கூட்டணி கிட்டத்தட்ட 8 வருடங்களாக 2 நாடாளுமன்ற தேர்தல், 1 சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மேலும் 3 இடைத்தேர்தல்களை சந்தித்துவிட்டது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியுடன் களம் காண தயாராகியுள்ளனர். மறுபக்கம் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளன.
தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. நாம் தமிழர், தவெக கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியை பொறுத்தவரை, 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி வருகிறார்.
அதேநேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். இதுவே அந்தக் கூட்டணிக்குள் முரண் ஏற்பட்டிருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதில் தொடர்ந்து அதிமுக, பாஜக மாறுபட்ட கருத்துகளை கூறுவது விவாதமாக மாறி வருகிறது.
இந்நிலையில் நேற்று பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி குறித்து கவலை இல்லை." என கூறினார். இது அரசியல் ரீதியாக மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு நேர் எதிராகவும், கூட்டணி முக்கியமில்லை என்கிற ரீதியிலும் அவர் பேசியிருப்பது அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
இதுதொடர்பாக அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "கூட்டணி ஆட்சி அமைக்க நாங்கள் ஏமாளி இல்லை என தான் பேசியதில் உள் அர்த்தமோ, உள்நோக்கமோ இல்லை என்று எடப்பாடி பழனிசாமி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்ற விமர்சனத்திற்காக எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் அது. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. கூட்டணி ஆட்சி தொடர்பாக அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி கலந்து பேசி முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்." என்றார்.












Click it and Unblock the Notifications