விரிச்சது மீன் வலை.. கிடைச்சது முதலை.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இளைஞர்.. அரியலூரில் திக்திக்
அரியலூர்: மீன் குட்டையில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தவரின் வலையில், முதலை சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாகச் செயல்பட்டதால் அவர் தப்பித்துக் கொண்டார்.
இங்குப் பலருக்கும் முதலையைக் கண்டால் பயம் இருக்கவே செய்யும். அதன் கரடுமுரடான தோலும், கூர்மையான பற்களும் அனைவருக்கும் ஒரு வித பயத்தையே ஏற்படுத்தும்.

அதிகரிக்கும் நகரமயமாக்கல், முதலைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் இருக்கும் பகுதிக்குள் முதலைகள் நுழைந்துவிடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. அதுபோல ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தேவேந்திரன். தனது வயலில் விவசாயம் செய்து வரும் அவர், அதேபோல மீன் குட்டை ஒன்றையும் வைத்திருக்கிறார்.
தேவேந்திரன் தனது மீன் குட்டையில் எப்போதும் போல வலையைப் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். வலையை இழுத்த போது. அது வழக்கத்தை விட மிக கனமாக இருந்துள்ளது. ஏதோ பெரிய மீன் தனது குட்டையில் இருந்தது அது மாட்டிக் கொண்டதாக நினைத்து அவர் சந்தோசப்பட்டுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து வலையை இழுத்துள்ளார். அப்போது மீனுக்குப் பதில் முதலை வருவதைக் கண்டு தேவேந்திரன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அவர், அருகே இருந்தவர்களின் உதவியுடன் வலையில் இருந்த முதலையை வெளியே எடுத்து கயிற்றால் கட்டியுள்ளார். தனது வயலில் இருக்கும் மீன் குட்டையில் முதலை இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
மேலும், இது குறித்து அவர் தூத்தூர் போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையினர் முதலையைப் பிடித்து அணைக்கரையில் விட்டனர். வயலில் இருக்கும் மீன் குட்டையில் முதலை கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முதலை கண்டறியப்பட்ட குருவாடிக்கு அருகே தான் கொள்ளிடம் ஆறு செல்கிறது. அங்கிருந்து இந்த முதலை வயலுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் தான் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் முதலை தென்பட்டது குறிப்பிடத்தக்கது. கொள்ளிடம் ஆற்றை அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில், அங்கே இருக்கும் முதலைகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்றும் இதனால் வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊர்வன வகுப்பை சேர்ந்த முதலைகள், நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது. நிலத்தில் இவை மிக மெதுவாக இருந்தாலும் கூட, நீரில் மின்னல் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இதற்கு இருக்கும் வலுவான வால் நீரில் நீந்துவதை எளிதாக்குகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என வெப்ப மண்டலப் பகுதிகளில் இது அதிகம் காணப்படும். முதலையின் தோலுக்காக அவை வேட்டையாடப்படும் சம்பவங்களும் அதிகரித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications