மாணவர்களை மகனாக கருதி... ரூ.1000 நிதியுதவி அளித்த கண்ணகி டீச்சர்... நெகிழ்ச்சிகர நிகழ்வு
அரியலூர்: அரியலூர் மாவட்டம் துப்பாபுரம் கிராமத்தில் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1000 நிதியுதவி அளித்துள்ளார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி.
Recommended Video
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள துப்பாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் கண்ணகி. கடந்த 12 ஆண்டுகளாக இதே கிராமத்தில் அவர் பணியாற்றி வருவதால் அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரத்தையும் , மாணவர்களின் குடும்பச் சூழலையும் நன்கறிந்து வைத்திருக்கிறார். கிராமமக்களும் கண்ணகி டீச்சரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கால் வேலையும் வருமானமும் இல்லாததால் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சிரமப்படுவதை கண்ணகி டீச்சர் அறிந்துள்ளார். இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என யோசித்திருக்கிறார். வறுமையான பின்புலம் உள்ள மாணவர்களின் குடும்பத்தை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.1000 கொடுக்குமாறு கண்ணகி டீச்சரிடம் அவரது மகன் தெரிவித்துள்ளார்.
மகன் அளித்த யோசனையை தட்டாமல் ஏற்ற கண்ணகி டீச்சர் தன்னிடம் படிக்கும் 62 மாணவர்களில் 41 மாணவர்களின் குடும்பம் ஏழ்மையில் இருப்பதை தெரிந்துகொண்டார். தன்னுடன் இந்த அறப்பணியில் பரமேஸ்வரி என்ற ஆசிரியையும் அவர் இணைத்துக்கொண்டார். 36 மாணவர்களின் குடும்பத்திற்கு (தலா ரூ.1000 வீதம் ரூ.36,000 -ஐ) கண்ணகி டீச்சர் தனது சொந்த நிதியை அளித்தார். மீதி உள்ள 5 மாணவர்கள் குடும்பத்திற்கான உதவித்தொகையை (தலா ரூ.1000 வீதம் ரூ.5,000) பரமேஸ்வரி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் துப்பாபுரம் கிராமத்திற்கு சென்று தன்னிடம் படிக்கும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து அவர்களிடம் ரூ.1000 அளித்ததுடன், இந்த தொகையை வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஆகாரங்களை பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுங்கள் என தாயுள்ளதோடு அறிவுறுத்தியுள்ளார்.
தலைமை ஆசிரியை கண்ணகியின் இந்த மனிதநேயமிக்க உதவியை கண்டு துப்பாபுரம் கிராமமக்கள் நெகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்தக்காலத்தில் எரிகிற நெருப்பில் பிடுங்கியது லாபம் என பலர் இருக்க, கண்ணகி டீச்சர் போன்ற மனிதநேயத்தின் மாண்பை காக்கும் ஒரு சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.












Click it and Unblock the Notifications