ஆர்சிபியா.. மும்பையா?.. கொலையில் முடிந்த ரோஹித்-கோலி ரசிகர்களின் மோதல்.. அரியலூரில் பயங்கரம்
அரியலூர்: அரியலூரில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் ரசிகர்கள் இடையே நடந்த விவாதம் கொலையில் முடிந்துள்ளது. இதில் ரோஹித் சர்மாவின் ரசிகரை, விராட் கோலியின் ரசிகர் கிரிக்கெட் பேட்டால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் நடக்கும் சந்தர்ப்பங்களில் இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்கள் அங்கம் வகிக்கும் அணிக்கு சப்போர்ட் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல வேளைகளில்இதுதொடர்பாக நண்பர்கள் இடையே விவாதங்கள் நடப்பது உண்டு.
இந்நிலையில் தான் அரியலூர் மாவட்டத்தில் ஆர்சிபியா.. மும்பை இந்தியன்ஸா எனும் வகையில் ரோஹித் சர்மா, விராட் கோலி ரசிகர்கள் இடையே நடந்த மோதல் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறந்து கிடந்த வாலிபர்
அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தில் இருந்து பொய்யூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. நேற்று காலை அவ்வழியாக மக்கள் சென்றனர். அப்போது தொழில்பேட்டைக்கு அருகே திறந்தவெளியில் தலையில் வெட்டு காயத்துடன் ஆண் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசில் புகார்
இதையடுத்து அவர்கள் உடனடியாக கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
மதுபோதையில் கொலை
விசாரணையில் இறந்து கிடந்தவர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் மகன் விக்னேஷ் என்பதும், இவர் சிங்கப்பூருக்கு செல்ல விசாவிற்காக காத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் நேற்று இரவு அவரது செல்போனிற்கு வந்த அழைப்பின் பேரிலேயே அவர் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் விக்னேஷ் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்தன. இதனால் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர். இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.
நண்பர் கைது
இதில் விக்னேசை கொலை செய்ததாக அவரது நண்பரான தர்மராஜ் கொலை கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விராட் கோலி-ரோஹித் சர்மாவின் ரசிகர்களான இவர்கள் 2 பேரும் கிரிக்கெட் தொடர்பான விவாதத்தில் அடிக்கடி விவாதம் செய்த நிலையில் தற்பாது அது கொலையில் முடிந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பான விபரம் வருமாறு:
ரோஹித்-கோலி ரசிகர்கள்
விக்னேஷ், தர்மராஜ் ஆகிய இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வுருகின்றனர். தர்மராஜ் சிறுவயது முதலே பேசுவதில் குறைபாடு உள்ளது. இவர்கள் 2 பேரும் தீவிரமான கிரிக்கெட் ரசிகர்கள். இதில் விக்னேஷ் ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகர். தர்மராஜ் விராட் கோலியின் தீவிர ரசிகர். இதனால் விக்னேஷ் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், தர்மராஜ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் ஆதரவு கொடுத்து வந்தனர். இதனால் ஐபிஎல் நடக்கும் போது அவர்கள் 2 பேருக்கும் இடையே நண்பர்களிடையேயான விவாதங்கள் நடப்பது உண்டு.
மதுபார்ட்டி வைக்கும் பழக்கம்
மேலும் மும்பை, பெங்களூர் அணிகள் வெற்றி பெற்றால் ஒருவருக்கொருவர் மதுபார்ட்டி வைத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு முன்பு ஒருமுறை மும்பை-பெங்களூர் அணிகள் மோதியது. இதில் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. அப்போது நடந்த மதுபார்ட்டியில் உன்னையே போல் தான் ஆர்சிபி அணி உள்ளது என தர்மராஜை பார்த்து விக்னேஷ் கிண்டல் செய்துள்ளார். இதனை தர்மராஜ் மறக்கவே இல்லை. மேலும் தனது இயலாமையை அடிப்படையாக வைத்து கிண்டல் செய்வதாக அவர் நினைத்தார்.
மீண்டும் கிண்டல் செய்ததால் ஆத்திரம்
மேலும் விக்னேசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என தர்மராஜ் முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று தர்மராஜ், விக்னேசுக்கு போன் செய்து மதுபானம் அருந்த வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து தர்மராஜ் மதுபானம், சிக்கன் உள்ளிட்டவற்றை வாங்கி வைத்தார். விக்னேசும், அவரும் சேர்ந்து மதுபானம் குடித்தனர். அப்போது கிரிக்கெட் தொடர்பாக இருவருக்கும் இடையே விவாதம் நடந்துள்ளது. அப்போது வழக்கம்போல் ரோஹித் சர்மாவின் ரசிகரான விக்னேஷ், விராட் கோலி ரசிகரான தர்மராஜ் மற்றும் ஆர்சிபி அணியை கிண்டல் செய்துள்ளார். இதனால்அவர் ஆத்திரமடைந்தார்.
பேட்டால் அடித்து கொலை
மேலும் கோபமடைந்த தர்மராஜ் பீர் பாட்டிலால் விக்னேஷ் தலையில் தாக்கினார். மேலும் கிரிக்கெட் பேட்டால் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த விக்னேஷ் இறந்துபோனார். இதையடுத்து தர்மராஜ் அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் விக்னேஷின் செல்போனுக்கு இறுதியாக வந்த செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார் தர்மராஜை கைது செய்தனர். கிரிக்கெட் தொடர்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி ரசிகர்கள் இடையே நடந்த விவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அரியலூரில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.