இன்று அமைச்சராக பொறுப்பேற்க தயங்கும் விசிக + ஐயூஎம்எல்? விஜய்யை பாடாய்படுத்தும் 2 கட்சிகள்
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியை விஜய் ஒதுக்க முடிவெடுத்துள்ளார். இதில் இரு கட்சிகளும் அமைச்சரவையில் பங்கேற்க தயாராக இருந்தாலும் கூட இன்று பொறுப்பேற்க தயங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியானது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து முழுமையாக வெளியேறிய நிலையில் பிற கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.

சட்டசபையில் பெரும்பான்மை இல்லாத நிலையில் கட்சிகள் கூட்டணிக்கு வெளியே இருந்து ஆதரவளிப்பது என்பது விஜய்க்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெறலாம். இதனால் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இந்நிலையில் தான் விஜய் தனக்கு ஆதரவளிக்கும் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து அமைச்சரவையில் இணைத்து கொள்ள முடிவெடுத்தார்.
காங்கிரஸ்க்கு 2 அமைச்சர் பதவி
இதனால் காங்கிரஸ், விசிக, 2 கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மதுரை மேலூர் எம்எல்ஏ விஸ்வநாத் ஆகியோர் அமைச்சராக உள்ளனர். இவர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். அதேபோல் விசிக மற்றும் இந்தியன் யூனியன்முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
விசிக - ஐயூஎம்எல்-க்கு தலா ஒரு அமைச்சர்
விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சரவை பதவி வழங்க விஜய் தயாராக உள்ளார். இதனை இருகட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளது. விசிகவை எடுத்து கொண்டால் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். திண்டிவனம் தொகுதியில் வென்ற வன்னியரசு, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிமணி ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் வன்னியரசுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை எடுத்து கொண்டால் வாணியம்பாடி தொகுதியில் சையத் பாரூக் பாஷா வெற்றி பெற்றுள்ளார். பாபநாசம் தொகுதியில் ஷாஜகான் வென்றுள்ளார். இவர்கள் 2 பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஷாஜகான் அமைச்சராக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இன்று பதவியேற்பதில் சிக்கல்
ஆனால் ஆனால் விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்கள் ஆவார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்த கட்சியின் தலைமை சார்பில் இன்று காலையில் தான் அமைச்சரவையில் பங்கேற்கும் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது முடிவை காலை 11 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதனால் அதற்கு முன்பாகவே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு புதிதாக அமைச்சர்களாகும் எம்எல்ஏக்களின் லிஸ்ட் செல்ல வேண்டும். அந்த வகையில் இன்று விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்பு மிகக்குறைவு என்றும், அடுத்தக்கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தின்போது அமைச்சர்களாவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் இனு்றைய தினம் தவெகவில் 19 பேர், காங்கிரஸ் கட்சியில் 2 பேர் என்று மொத்தம் 21 பேர் மட்டும் அமைச்சர்களாவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications