பகலிலெல்லாம் கல்யாண நாள் கொண்டாட்டம், செம குஷி.. இரவில் கர்ப்பிணியின் அந்த முடிவு.. அரியலூர் அதிருது
அரியலூர்: அரியலூர் பகுதியே சோகத்தில் உள்ளது.. உருகி உருகி காதலித்த நிலையில், திடீரென மனைவி எடுத்த முடிவு கணவனையும் சேர்த்து உருக்குலைய வைத்துவிட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது சோழமாதேவி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருகிறார் சக்திவேல். இவர் அந்த பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

காதல் திருமணம்: பவானி என்ற பெண்ணை சக்திவேல் பல வருடமாக காதலித்து வந்தார்.. ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர்.. பவானியும் சக்திவேலை உயிருக்கு உயிராக நேசித்தார்.. ஆனால், இருவரது வீட்டிலுமே இவர்களின் காதலை ஏற்கவில்லை.. அதனால், இருவருமே 2 வருடங்களுக்கு முன்பு வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டனர்.. எனினும், சில மாதங்களுக்கு முன்பு, 2 குடும்பத்தினருமே இவர்களை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.
கல்யாணமாகி 2 வருடமான நிலையில், பவானி இப்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.. இந்நிலையில், பெற்றோரை பார்த்து வருவதாக சொல்லிவிட்டு, கடந்த மாதம் தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார் பவானி..
திருமண நாள்: நேற்று இவர்களுக்கு திருமண நாள் என்பதால், அதை கொண்டாட வேண்டும் என்பதற்காக, மாமியார் வீட்டுக்கு சென்று, பவானியை தன்னுடைய அழைத்து வந்துவிட்டார் சக்திவேல். பிறகு, இருவரும் சேர்ந்து தங்களது திருமண நாளை சிறப்பாக கொண்டாடியதாக தெரிகிறது...
நாளெல்லாம் திருமண நாள் கொண்டாட்டங்கள் நடந்து முடிந்தநிலையில், நேற்றிரவு இருவருக்கும் சண்டை வந்துவிட்டது.. கருத்து வேறுபாடு காரணமாக, இருவருமே வாக்குவாதம் செய்து கொண்டதாக தெரிகிறது.
திடீர் மனைவி: அதற்கு பிறகு, வீட்டிலிருந்து சக்திவேல் வெளியே கிளம்பிவிட்டார்.. அழுதுகொண்டேயிருந்த இருந்த பவானியோ, திடீரென சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு வந்த சக்திவேல் மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதார்..
இதையடுத்து, பவானியின் அப்பா ரங்கநாதன் இது தொடர்பாக தா.பளூர் போலீசில் புகார் மதரவும், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பவானியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை: இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது கொலையா? தற்கொலையா? என்பது குறித்த விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகியிருப்பதால், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது..
"காதலனுக்காகவே வீட்டை பகைத்து கொண்டு, காதலித்தவனே கணவனாக அமைந்தும்கூட வாழறதுக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டதே... வயிற்றிலுள்ள குழந்தையைகூட நினைச்சு பார்க்கலையே" என்று உறவினர்கள் கதறியழுதது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.. 6 மாத கர்ப்பிணி பெண், தன்னுடைய கல்யாண நாளன்றே உயிரிழந்த சம்பவம் அரியலூரை அதிர வைத்து வருகிறது.












Click it and Unblock the Notifications