வெறும் 13 வயசு தான்.. பள்ளி செல்லும்போது அப்படியே சரிந்த சிறுமி.. மாரடைப்பால் பலி! கர்நாடகாவில் ஷாக்
பெங்களூர்: வெறும் 13 வயதே ஆன சிறுமி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்படவே மயங்கி விழுந்து உயிரிழந்த ஷாக் சம்பவம் ஒன்று நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
நமது நாட்டில் முன்பு மாரடைப்பு என்பது வயதானவர்களிடையே தான் அதிகம் ஏற்படும். அப்படியில்லை என்றால் ஏற்கனவே இணை நோய் உள்ளவர்களுக்குத் தான் அதிகம் ஏற்படும்.

ஆனால், கடந்த சில காலமாக இந்த நிலை அப்படியே மாறி வருகிறது. திடீர் திடீரென இளைஞர்கள், அவ்வளவு ஏன் சின்ன குழந்தைகள் மத்தியிலும் கூட மாரடைப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
ஷாக் சம்பவம்: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்துள்ளது. அங்கே கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் வெறும் 13 வயதே ஆன சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் அவர் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்படவே அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
13 வயது சிறுமி: உயிரிழந்த அந்த சிறுமி முடிகெரே அடுத்துள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தில் வசிக்கும் 13 வயது ஸ்ருஸ்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ருஸ்தி, தராதஹள்ளி தொடக்கப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்தார்.
இதைப் பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனே அருகே உள்ள அரசு எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அந்த சிறுமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பு: கொரோனாவுக்கு பிறகு இருந்தே இளைஞர்களிடையே இதுபோன்ற மாரடைப்பு அதிகரித்தே வருகிறது. இதற்கும் கொரோனாவுக்கும் என்ன மாதிரியான தொடர்பு என்பது தெளிவாகத் தெரியாமலேயே இருந்தது. முன்பு இது குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த விவகாரத்தில் தங்களிடம் எந்தவொரு தரவுகளும் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆய்வுகள் சொல்வது என்ன: இதற்கிடையே, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் இது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தி இருந்தது. அதில் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோருக்கு மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்கள் அடுத்த ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், ஓய்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் இளைஞர்கள் இடையேயான மாரடைப்பைக் குறைக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நவராத்திரி சமயத்தில் குஜராத் மாநிலத்தில் 'கர்பா' நடனத்தின் போது வெறும் சில மணி நேரத்தில் அடுத்தடுத்து பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டது. பதின்ம வயதில் இருப்போருக்கும் பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications