நீங்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி அணிவோம்.. மாணவர்களிடையே போட்டி! விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சினை
பெங்களூர்: கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பியு கல்லூரியில் 3 மாணவிகள் ஹிஜாப்புடன் நுழைந்தனர். பதிலுக்கு இந்து மாணவிகள் கழுத்தில் காவி நிற ஷால் அணிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகாவில் உடுப்பி, மங்களூர், சிக்மக்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ப்ரீ யூனிவர்சிட்டி எனப்படும் பியு கல்லூரிகளில் (11, 12 ஆம் வகுப்பு படிப்பது) முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் தடை விதிக்கப்பட்டது.
நீண்ட காலமாக இந்த கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் போதிலும் தற்போது இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

ஹிஜாப்
உடுப்பியில் பைந்தூரில் உள்ள அரசு ப்ரீ யூனிவர்சிட்டி எனப்படும் பியு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த 6 மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியே நிற்க வைக்கப்படும் நிலை நீடித்து வருகிறது. இவர்கள் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.

5 ஆவது கல்லூரி
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட கல்லூரிகளில் இது 5ஆவது கல்லூரியாகும். அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி நிற ஷால் அணிவோம் என இந்து மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக அரசு விரைந்து முடிவு எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பு வரும் வரை கல்லூரிகளில் பொதுவான டிரஸ் கோடே பின்பற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவி ஷால்
இந்த நிலையில் உடுப்பியில் உள்ள கோட்டீஸ்வராவில் கலவரா வரதராஜ் அரசு கல்லூரியில் இன்று 3 மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்தனர். இதை பார்த்த இந்து மாணவர்கள் அவர்களுக்கு போட்டியாக கழுத்தில் காவி துண்டு அணிந்து வந்தனர். இதையடுத்து அங்கு வந்த கல்லூரி முதல்வர் இந்து மாணவர்களிடம் காவி ஷாலை எடுத்துவிட்டு உள்ளே வருமாறு கூறினார்.
Recommended Video

முஸ்லீம் மாணவி
அவர்கள் காவி துண்டை எடுத்துவிட்டு சென்றார். அது போல் முஸ்லீம் மாணவிகளையும் ஹிஜாப்பை நீக்கிவிட்டு வருமாறு கூறினார். அதை ஏற்க மறுத்த மாணவிகள் கல்லூரியிலிருந்து வெளியே வந்தனர். மாண்டியாவில் இன்றைய தினம் கல்லூரி மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். அது போல் அதே மாவட்டத்தில் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிந்து கொண்டு ஹிஜாப் மாணவிகளுடன் போராட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications