வெளி மாநில தமிழர்களுக்கு 5% இட ஒதுக்கீடு.. பெங்களூர் கன்னடர்-தமிழர் ஒற்றுமை மாநாட்டில் தீர்மானம்
பெங்களூர்: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் முதல் முறையாக கன்னடர் - தமிழர் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநட்டில் எடியூரப்பா கலந்து கொண்டார். மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. வெளி மாநில தமிழர்களுக்கு 5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக தாய்மொழி கூட்டமைப்பு சார்பில் கர்நாடக கன்னடர் - தமிழர் ஒற்றுமை-கலாசார மாநாடு பெங்களூரில் நடைபெற்றது. பெங்களூர் அரண்மை மைதானத்தில் உள்ள பிரன்சஸ் கூட்ட அரங்கில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எடியூரப்பா பேசுகையில், தென்இந்தியாவில் அதிக மொழிகள் பேசப்படுகின்றன. கர்நாடகம் - தமிழ்நாடு இடையே வெவ்வேறு மொழி பேசப்படுகிறது. நான் முதல்வராக இருந்த போது, பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்டது. கர்நாடகாவில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். காலம் உள்ளவரை கன்னடா்கள்-தமிழர்கள் இடையே நல்லுறவு இருக்கும்" என்று பேசினார்.
இந்த மாநாட்டில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சில முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழக அரசு, வெளிமாநில தமிழர்களுக்கு கல்வி-வேலை வாய்ப்பில் 5 % இட ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும்.
* தமிழக அரசு அயலக தமிழர் நலத்துறை கிளையை கர்நாடக தலைநகர் பெங்களூரில் தொடங்க வேண்டும்.
* கர்நாடகாவில் 3- வது மொழியாக தமிழை கற்பிக்கவும், பாடப்புத்தகத்தை தயாரிக்கவும் அனுமதி அளித்து ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும்.
* கர்நாடகாவில் பிற மொழியினருக்கு வழங்கும் சலுகைகள் தமிழர்களுக்கும் வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* அதுமட்டும் இன்றி கர்நாடகாவின் நிலம், நீர், மொழி, எல்லை உள்ளிட்ட மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளில் கன்னடர்கள், கர்நாடக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கர்நாடக தமிழர்கள் ஆதரவாக இருப்பார்கள் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications