‛செக்ஸ் டார்ச்சர்’.. ரேவண்ணாவுக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி!.பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண்
பெங்களூர்: பாலியல் புகாரில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா, அவரது பேரன் பிரஜ்வல் சிக்கி உள்ளனர். பிரஜ்வல்லின் ஆபாச வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தி சிறை வைத்ததாக ரேவண்ணா நேற்று கைதான நிலையில் அவரை 4 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார். மேலும் ரேவண்ணா, பிரஜ்வல்லால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் செக்ஸ் புகாரில் சிக்கி உள்ளனர். இதில் ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிப்புரா தொகுதியின் ஜேடிஎஸ் எம்எல்ஏவாக ரேவண்ணா உள்ளார். அவரது மகன் பிரஜ்வல் ஹாசன் ஜேடிஎஸ் எம்பியாக உள்ளார்.

பிரஜ்வல் மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். பாஜக + ஜேடிஎஸ் வேட்பாளராக அவர் களமிறங்கி உள்ளார். ந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் நடந்தது. இந்நிலையில் தான் தேர்தலுக்கு முன்பாக பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பிரஜ்வல் ஜெர்மனி சென்றார். ஆபாச வீடியோ தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டு வருகிறது. அதாவது வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் மீது அளித்த பாலியல் புகாரில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை பேசவிடாமல் தடுக்க திடீரென்று கடத்தியதாக ரேவண்ணா மீது மைசூர் மாவட்டம் கேஆர் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று ரேவண்ணாவை எஸ்ஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நேற்று இரவு பெங்களூர் பத்மநாபநகரில் உள்ள தனது தந்தை தேவகவுடாவின் வீட்டில் பதுங்கி இருந்தபோது ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் தான் கைது செய்யப்பட்ட ரேவண்ணா இன்று பெங்களூர் கோரமங்களாவில் உள்ள 17 வத ஏசிஎம்எம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது ரேவண்ணாவிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி எஸ்ஐடி தரப்பில் போலீஸ் காவலுக்கு அனுமதி கோரப்பட்டது. அதேபோல் ரேவண்ணா தரப்பு வாதங்களை முன்வைக்க அவரது வழக்கறிஞர் அனுமதி கோரினார். ஆனால் நீதிபதி ரேவண்ணா வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கவில்லை. மாறாக ரேவண்ணாவை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதனால் ரேவண்ணாவை கஸ்டடியில் வைத்து எஸ்ஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
மேலும் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரின் பாலியல் வன்கொடுமை பற்றி புகாரளிக்க எஸ்ஐடி உதவி எண்ணை அறிவித்துள்ளது. அதன்படி ரேவண்ணா, பிரஜ்வல்லால் பாதிக்கப்பட்ட பெண்கள் 63609 38947 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். புகாரளிப்போரின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என எஸ்ஐடி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications