கடவுளே எங்களை காப்பாத்துங்க.. நடுவானில் 4 மணிநேரம் கதறிய பயணிகள்.. ஹைதராபாத் விமானத்தில் திக்திக்
பெங்களூர்: ஹைதராபாத்தில் இருந்து கர்நாடகாவின் உப்பள்ளிக்கு சென்ற தனியார் விமானம் தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தது. இதனால் பயந்து போன பயணிகள் விமானத்தில் சாமி கும்பிட்டு, பைலட்டை திட்டி தீர்த்ததோடு, 4 மணிநேரம் அவர்கள் உயிரை கையில் பிடித்து அச்சத்தில் இருந்த திக்திக் நிமிடங்கள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
''ஓ மை காட்.. ஓ ஷிட்.. பைலட் ஏன் இப்படி செய்கிறார்.. ஹே பைலட் விமானத்தை பெங்களூருவுக்கு திருப்பு'' என்று பயணிகள் கண்ணீருடன் கதற... ''அழாதீங்க.. அழாதீங்க..'' ஒன்றும் ஆகாது என சிலர் தைரியம் ஊட்ட.. ஆனாலும் உயிர் பயத்தில் நடுவானில் பைலட்டை 4 மணிநேரம் பயணிகள் திட்டி தீர்த்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஹைதராபாத் – உப்பள்ளி விமானம்
அதாவது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு 'ஃப்ளை 91' IC3401 என்ற விமானம் கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி விமான நிலையத்துக்கு புறப்பட்டது. இந்த விமானம் உப்பள்ளி விமான நிலையத்தை நெருங்கியது. மாலை 4.30 மணிக்கு தரையிறங்க தயாரானபோது சிக்கல் ஏற்பட்டது.
மோசமான வானிலை
உப்பள்ளியில் நேற்று மோசமான காலநிலை நிலவியது. இதனால் விமானத்தை தரையிறக்குவது ஆபத்து. இப்போது தரையிறக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி விமானத்தை வானிலேயே வட்டமடிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதற்கு பைலட்டும் ஓகே சொல்லி உள்ளார். ஆனால் இதுபற்றி பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
வட்டமடித்த விமானம்
இதனால் விமானம் உப்பள்ளி விமான நிலையத்தில் தரையிறங்காமல் வானில் வட்டமடிக்க தொடங்கியது. முண்டுகோடு, தாவணகெரே, சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு மேலாக விமானம் பறந்து கொண்டே இருந்தது. நீண்டநேரம் ஆகியும் விமானம் தரையிறங்காததால் பயணிகள் அச்சமடைந்தனர்.
இதனால் விமானத்தில் ஏதோ பிரச்சனை வந்துவிட்டது என்று பீதியில் உறைந்து போயினர். பயணிகள் தங்களின் கடவுள்களை கும்பிட தொடங்கினர். அதோடு பைலட்டை திட்ட தொடங்கினர்.
கதறி அழுத பயணிகள்
இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. அதில், பெண் பயணி ஒருவர் கதறி அழுது கண்களை மூடி கைகளை கூப்பி எப்படியாவது தங்களை காப்பாற்றும்படி வேண்டி கொள்கிறார். அதேபோல் இன்னொருவர் விமானத்தில் ஏற்பட்ட அதிர்வால் 'ஓ மை காட்' என்று அபாயக்குரல் எழுப்புகிறார்.
இன்னொரு ஆண் பயணி, "ஓ ஷிட்... அவர் (பைலட்) ஏன் இப்படி செய்கிறார்?" என தனது கோபத்தை வெளிப்படுத்தும் நிலைியல் 'ஒன்றும் ஆகாது.. அழ வேண்டாம்.. அழ வேண்டாம்.. பொறுமையாக இருங்க'' என்று ஒருவர் சக பயணியை சமாதானப்படுத்தும் குரலும் கேட்கிறது. பயணிகளின் இந்த அழுகுரலை தொடர்ந்து பைலட், ''உங்களுக்கு தொடர்ந்து தகவல்களை வழங்குவோம். கொஞ்சம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருங்கள்'' என மைக்கில் கூறுகிறார்.
4 மணிநேரம் திக்திக்
அதற்கு ஒருவர், "விமானத்தை பெங்களூர் அல்லது பெலகாவிக்கு விடுங்கள்'' என்று கத்த.. இன்னொரு பயணியோ, ''ஆம் பெலகாவி பக்கத்தில் தான் உள்ளது'' என்கிறார். இப்படியாக அந்த வீடியோவில் பயணிகள் அழுகுரல்கள் பதிவாகி உள்ளது.
இறுதியாக 4 மணிநேரம் கழித்து அந்த விமானம் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகு தான் அனைத்து பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இருப்பினும் விமானத்தின் சூழல் பற்றி பைலட் முறையான அறிவிப்புகளை தரவில்லை என்று ஃப்ளை91 ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது கோபத்தை வெளிக்காட்டினர்.
விமான நிறுவனம் விளக்கம்
இதற்கிடையே தான் அந்த விமான நிறுவனம் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. அதில், ''ஹைதராபாத்தில் இருந்து உப்பள்ளி நோக்கி சென்ற IC3401 விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் ஏற்படவில்லை.
விமானம் பிற்பகல் 3 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டது. உப்பள்ளியை நெருங்கியபோது மோசமான வானிலையால் விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மீண்டும் உப்பள்ளி சென்று அங்கிருந்து ஹைதராபாத்துக்கு வந்தது.
பயணிகளின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் எவ்வித சமரசமும் செய்வது இல்லை. எங்களின் விமானிகள், விமான பணிக்குழுவினர் மற்றும் தரைக்கட்டு மையத்தில் இருப்பவர்கள் எத்தகைய சூழலையும் கையாளும் பயிற்சி பெற்றவர்கள். இதனால் பயணிகளுக்கு எப்போதும் பாதுகாப்பு உண்டு'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications