4 வயது மகனை கோவாவில் கொலை செய்த பெங்களூர் பெண் சிஇஓ-வின் கணவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்-பரபர தகவல்!
பெங்களூர்: 4 வயது மகனை கோவாவில் கொலை செய்து சிக்கிய பெங்களூர் பெண் சிஇஓ சுசானா சேத் (சுசனா) கணவர் வெங்கட்ராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு துறை சார் நிறுவனத்தை நடத்தி வருபவர் சுசானா சேத். செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் டாப் 100 வல்லுநர்கள் பட்டியலில் சுசானா சேத்தும் ஒருவர். இவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். கோவாவுக்கு 4 வயது மகனை அழைத்துச் சென்று தலையணையால் அமுக்கி கொலை செய்த சுசானா சேத், திங்கள்கிழமையன்று கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சுசானா சேத்துக்கும் கணவர் வெங்கட்ராமனுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. வெங்கட்ராமன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு 2019-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சின்மய் என பெயரிட்டனர். 2020-ம் ஆண்டு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினர். அப்போது, ஞாயிற்றுக்கிழமை தோறும் மகனை நேரில் சந்தித்து பேச வெங்கட்ராமனுக்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்தது.
ஆனால் மகனை வாரம் தோறும் வெங்கட்ராமன் நேரில் வந்து சந்திப்பதை சுசானா சேத் விரும்பவில்லையாம். இதனால் 4 வயது மகனை கோவாவுக்கு அழைத்துச் சென்று தங்கி இருந்த அபார்ட்மெண்ட்டில் தலையணையால் அமுக்கி கொலை செய்திருக்கிறார் சுசானா சேத். மகனை கொலை செய்து சூட்கேஸில் அந்த குழந்தையின் உடலை அடைத்து காரிலேயே பெங்களூர் திரும்பினார் சுசானா. கோவா போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் சுசானா குறித்து கர்நாடகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் சுசானா சேத் காரில் பயணித்த போது வழிமறித்த கர்நாடகா போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சூட்கேஸில் மகனின் சடலத்துடன் சுசானா சேத் சிக்கினார். இதனையடுத்து சுசானா சேத்தை கர்நாடகா போலீசார் கைது செய்தனர்.
சுசானே சேத்தின் கணவர் வெங்கட்ராமன் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவருக்கு கர்நாடகா போலீசார் தகவல் கொடுத்து வரவழைத்துள்ளனர். தற்போதும் தொடர்ந்து சுசானா சேத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications